பொலிஸ் அதிகாரி ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவனுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த மாணவன் ஒருவனுக்கு நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் டி சில்வா இவ்வாறு உணவளித்துள்ளார்.
இன்று காலை கடுவலை முனிதாச குமாரதுங்க வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளான்.
இதன்போது நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தார்.
விபத்தை நேரில் பார்த்த அவர் , சிறுவனை ஜீப்பில் ஏற்றி நவகமுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளித்த பின்னர், மாணவன் பசியுடன் இருந்ததை உணர்ந்து அங்கிருந்த உணவகத்திற்கு மாணவனை அழைத்துச் சென்று இவ்வாறு உணவளித்துள்ளார்.
பின்னர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து, மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.