முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதிகள் இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பொலிஸாரின் ஆதரவுடன் மணல் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.