சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணை ஒன்று அண்மையில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அமைதியின்மையை தணித்து, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, தாம் விரும்பும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென அவர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த பத்து கட்சிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி, அவசரமாக மாற்றப்பட வேண்டிய பல விடயங்களைக் குறிப்பிட்டு குறித்த பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சில விடயங்கள் பின்வருமாறு…
* அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபையை நிறுவுதல்.
* வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் விடயதானங்கள் தேசிய நிறைவேற்று சபையால் தீர்மானிக்கப்படும்.
* தேசிய நிறைவேற்று சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்.
* தேசிய நிறைவேற்று சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதியால் வரையறுக்கப்பட்ட அமைச்சரவை நியமனம்.
* அமைச்சர்கள் சம்பளம் பெறாமல் ஏனைய சலுகைகளை குறைத்து செயற்படுதல்
* அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை உரிய திருத்தங்களுடன் மீண்டும் செயல்படுத்துதல்.
* ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மாறாத தேசியக் கொள்கையை 6 மாத காலத்திற்குள் உருவாக்குதல்.