சிம்பாப்வேயில் வெள்ளிக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் ஈஸ்டா் திருவிழைவையொட்டி புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த 35 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, சாலையிலிருந்து நிலைதடுமாறி மிக ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனா்.
பேருந்தின் கொள்ளளவுக்கு அதிகமாக 106 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மோசமான சாலைகளைக் கொண்டுள்ள சிம்பாப்வேயில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநா்கள் அதிவேகமாக பேருந்துகளைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.