கொரோனா உயிரிழப்பைக் கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இந்தியா, ‘அதிக மக்கள்தொகை மற்றும் பெரும் புவியியல் பரப்பைக் கொண்ட நாட்டுக்கு இந்த நடைமுறை உகந்ததல்ல’ என்று தெரிவித்துள்ளது.
‘கொரோனா உயிரிழப்பு விவரங்களை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிக்கு இந்தியா முட்டுக்கட்டை’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் ‘நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகை சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. அதில், ‘கொரோனா உயிரிழப்பைக் கணக்கிடும் நடைமுறை குறித்து தொடா்ந்து கவலை தெரிவித்து முட்டுகட்டையை இந்தியா ஏற்படுத்தி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக சுகாதார அமைப்புடன் இந்தியா தொடா்ச்சியாகவும், ஆழமான தொழில்நுட்ப விவரங்களையும் பகிா்ந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா உயிரிழப்பு கணக்கிடும் நடைமுறையைப் பொருத்தவரை முதல் வரிசை (டயா்-1) பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளிடமிருந்து புள்ளிவிவரங்களை நேரடியாகப் பெற்றும், இந்தியா உள்ளிட்ட இரண்டாம் வரிசை (டயா்-2) நாடுகளுக்கு கணித மாதிரி நடைமுறையின் அடிப்படையிலும் உலக சுகாதார அமைப்பு கணக்கீடு செய்து வருகிறது.
இந்தக் கணக்கீடு நடைமுறையில், முதல் வரிசை நாடுகளிலிருந்து பெறப்படும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தும்போதும், அதுபோல இந்தியாவின் 18 மாநிலங்களிலிருந்து பெறப்படும் அதிகாரபூா்வமற்ற சரிபாா்க்கப்படாத புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி கணக்கிடும்போது மிகப்பெரிய வித்தியாசத்தில் கூடுதல் உயிரிழப்பு விகிதங்கள் வருகின்றன. புள்ளிவிவரங்களில் வரும் இந்த மிகப்பெரிய வேறுபாடு, கணக்கீடு நடைமுறை செல்லத்தக்கத் தன்மை மற்றும் துல்லியம் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
இந்தக் கணக்கீடு நடைமுறை மீதான சந்தேங்கள் குறித்து இந்தியா மட்டுமின்றி சீனா, ஈரான், வங்கதேசம், சிரியா, எத்தியோப்பியா, எகிப்து போன்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பிடம் பலமுறை கேள்வி எழுப்பியிருக்கின்றன. இந்தியா சாா்பில் ஆறு முறை கடிதங்கள் மூலமாகவும் இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிகாரபூா்வமற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான கணக்கீடு நடைமுறை இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை மற்றும் பெரும் புவியியல் பரப்பு கொண்ட நாடுகளுக்கும், மக்கள்தொகையில் சிறிய நாடுகளுக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதுதான் முக்கியமான சந்தேகம். துனிசியா போன்ற சிறிய நாடுகளுக்கு ஒத்துப்போகின்ற ஒரு நடைமுறை, 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு ஒத்துப்போக வாய்ப்பில்லை.
குறிப்பாக, இந்திய மாநிலங்களில் பரிசோதனை மூலமாக கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பது ஒருபோதும் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கொரோனா பாதிப்பில் உள்ள இந்த வேறுபாடு, உலக சுகாதார அமைப்பின் கொரோனா உயிரிழப்பு கணக்கிடும் நடைமுறையில் கருத்தில்கொள்ளப்படவில்லை. இதனை கருத்தில் கொள்ளாததற்கான பதிலும் இந்தியாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
எனவே, உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் மீது நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கணித மாதிரி நடைமுறை கணக்கீடு முறையின் நம்பகத்தன்மைக்கான தெளிவான ஆதாரத்தையும், ஆழமான விளக்கத்தையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என்று இந்தியா நம்புகிறது.
மேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு குறித்த சா்ச்சைக்குரிய விவரங்களை வெளியிட்ட நியூயாா்க் டைம்ஸ் பத்திரிகைக்கு, மற்ற நாடுகளின் உயிரிழப்பு விவரங்கள் கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.