ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் 5 சதவீத விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப் பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருள்கள் 3 சதவீத வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 சதவீத வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில பொருள்களுக்கு வரி உயரக்கூடும்.
பெரும்பாலான மாநிலங்கள் வரி வருவாயைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்துக்கும் மத்திய அரசின் சலுகையை சார்ந்து இருக்க முடியாது என்பதால் வரி உயர்வை மேற்கொள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அமலில் ஜிஎஸ்டி வரி இனங்கள் 5 சதவீதம், 12, 18, 28 சதவீத அடுக்குகளாக உள்ளன. தவிர தங்கமும் தங்க நகைகளும் 3 சதவீத வரி அடுக்கில் உள்ளன.
அதுதவிர வரி இனங்களுக்குள் வராத, சந்தை மதிப்பு பெறாத, பொட்டலமிடப்படாத உணவுப் பொருள்கள் அனைத்தும் வரி விலக்குப் பட்டியலில் உள்ளன.
இச்சூழ்நிலையில் வரிவிலக்குப் பட்டியலில் உள்ள சில உணவுப் பொருள்களை 3 சதவீத வரி இனப் பட்டியலுக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யலாம் எனத் தெரிகிறது.
அதுபோல 5 சதவீத வரி விதிக்கப்படும் பொருள்களுக்கு 7 சதவீதமாகவோ அல்லது 8, 9 சதவீதமாகவோ உயர்த்துவதும் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். எனினும் மத்திய, மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகே ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும்.
ஒரு கணக்கீட்டின்படி, தற்போது உள்ள 5 சதவீத இன பொருள்களுக்கு, குறிப்பாக பொட்டலமிடப்பட்ட பொருள்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வரியை உயர்த்தினாலும் அதுவே ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி வரி வருவாயை ஈட்டித் தரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 சதவீத வரி விதிப்புள்ள பொருள்களில் உள்ள பெரும்பாலானவற்றை 8 சதவீத வரி இனப் பட்டியலுக்குள் கொண்டு வரவே ஜிஎஸ்டி கவுன்சில் விரும்புகிறது.
ஜிஎஸ்டி வரம்பின்படி சில அத்தியாவசியப் பொருள்களுக்கு மிக குறைந்த வரியோ அல்லது வரி விலக்கோ அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆடம்பர பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. சில ஆடம்பர பொருள்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக இந்த செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பீடுகளை வழங்கும் காலக்கெடு இந்த மாதம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஜிஎஸ்டி இழப்பீடுகளுக்காக மத்திய அரசை சார்ந்து இருக்கக் கூடாது என்பதோடு மாநிலங்கள் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வரி உயர்வை பரிசீலனை செய்வதற்கென ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஆண்டு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அனைத்து மாநில அமைச்சர்களையும் கொண்ட ஒரு குழுவை நியமித்தது. வரி சீராய்வு செய்யவும், வரி இனங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இக்குழு ஆலோசனைகளை வழங்கும்.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை அடுத்த மாதத்துக்குள் இறுதி செய்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. இக்கூட்டம் மே மாத மத்தியில் நடைபெறக் கூடும்.
அனைத்துப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017, ஜூலை 1 ஆம் திகதி அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை 2022 , ஜூன் வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்குவது எனவும் மாநில அரசுகளின் வரிவருவாயை 14 சதவீதமாக பாதுகாப்பது எனவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அந்தக் காலக்கெடு ஜூனில் முடிகிறது.