மாறுபட்ட பாலீர்ப்பை வெளிப்படையாக சொல்வதால் பார்வைகள் மாறுகின்றன என்றும், இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு தமக்கு இருப்பதை ஒருவர் உணர்வதற்கு யாரும் காலகட்டம் நிர்ணயிக்க முடியாது என்றும் கூறுகிறார் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி.
“கக்கூஸ்”, “ஒருத்தரும் வரல” உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கிய இயக்குநர் திவ்யபாரதி, தமது மாறுபட்ட பாலீர்ப்பு குறித்து சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தவர். மாற்று பாலினத்தவர்களின் பிரச்னைகளை ஆவணப்படமாக எடுப்பதற்கான வேலையை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறார்.
அவரது பட முயற்சி குறித்தும், மாறுபட்ட பாலியல் ஈர்ப்பு கொண்டவர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பாகவும் அவரிடம் பேட்டி எடுத்தது பிபிசி தமிழ்.
அந்தப் பேட்டியில் இருந்து:
மாற்று பாலினத்தவர்கள் தொடர்புடைய பிரச்னையை பேசு பொருளாக்குவது தற்போதைய டிரெண்ட் ஆக உள்ளது. நீங்கள் இது சார்ந்த ஆவணப்படம் எடுப்பதற்கான காரணம் என்ன?
கல்லூரிக் காலத்திலிருந்தே குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போதே நான் மாற்று பாலினத்தவர்கள் குறித்தான படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் ஒன்பதாவது படிக்கும்போது லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய நூல் குறித்த விமர்சனத்திற்கான ஒரு நிகழ்வு நடந்தது.
அந்த நிகழ்வில்தான் முதல் முறையாக மாற்றுப் பாலினத்தவர்களைப்பற்றி அறிந்தேன். அதன் பிறகு தொடர்ச்சியாக மாற்று பாலினத்தவர்கள் சார்ந்த தேடல் தொடங்கியது. நிறைய புத்தகங்கள் தேடிப் படித்தேன். நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது எனக்கு அவர்கள் மீதான ஒரு புரிதலும் நன்றாக ஏற்பட்டது.
“ஒருத்தரும் வரல” ஆவணப் படம் முடிந்தவுடன் அடுத்த கட்டமாக மாற்று பாலினத்தவர்களுக்கான ஆவணப்பட வேலையை தொடங்கினேன். குறிப்பாக 2017-2018 காலக்கட்டத்தில் மாற்று பாலினத்தவர்கள் கொலைகள் பல பகுதிகளில் நடந்தன. அது சார்ந்த வழக்குகளை கிரேஸ் பானு உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்தனர்.
பிறகு 2019 ஜனவரி மாதம் மாற்று பாலினத்தவர்கள் தொடர்புடைய பிரச்னைகளை மையமாக வைத்து ஆவண படத்துக்கான வேலைகளை தொடங்கினேன். மாற்று பாலினத்தவர்கள் சார்ந்த பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கு, அவர்கள் பாணியில் பேசும் சில சொற்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக “தண்டா”க்கு போவது என்றால் பாலியல் தொழிலுக்கு செல்வதாகும். இதை அவர்கள் பாணியில் பேசுவது மிக முக்கியமானது. இதன் மூலம் இன்னும் நெருக்கமாக அவர்கள் சார்ந்த பிரச்னைகளை அறிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து இந்த வேலையை செய்யத் தொடங்கினேன்.
இந்த வேலை தொடங்கி ஒன்பதாவது மாதத்தில், ஆவணப் படத்தை விட இதை புனைவாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன். ஆனால் புனைவாக எடுக்க மிக முக்கியமாக பொருளாதார உதவி தேவைப்பட்டது. இதற்கு முன்பு எடுத்த ஆவணப்படங்கள், அதற்காக நான் எதிர்கொண்ட வழக்குகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் என்னைப் போன்ற ஒருவர் புனைவுப் படம் எடுப்பதற்கு பொருளாதாரம் கிடைக்காது. அப்போதுதான் “ஒருத்தரும் வரல” ஆவணப்படத்தை பார்த்த சிலர், மாற்றுப் பாலினத்தவர்கள் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கும் படத்துக்கு பொருளாதார உதவி செய்ய முன்வந்தனர். இதையடுத்தை படத்தை புனைவாகவே எடுக்க முடிவு செய்தோம்.
2019 இறுதியில் படப்பிடிப்பு எல்லாம் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கினோம். பிறகு அந்தப் படத்தை தற்போது முடித்துள்ளோம். கொரோனா நோய் தொற்றால் கடந்த இரண்டு வருடங்களாக படத்தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அது முடிந்த நிலையில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த பட உருவாக்கத்திலும், உங்கள் அனுபவத்திலும் பொதுவாக மாற்று பாலினத்தவர்கள் சந்திக்கக்கூடிய முதன்மையான பிரச்னை எது ?
மாற்று பாலினத்தவர்களுக்கான முதன்மையான பிரச்னை அவர்களுக்கான அங்கீகாரம் தான். தன்னைப் பெண்ணாக மாற்றிக் கொள்வதற்காக அவர்கள் உடல் ரீதியாக மாற்றங்களை செய்து கொள்கிறார்கள். இந்த மாற்றத்திற்கான பலனாக அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் விரும்பும் பாலினமாக அவர்களை அங்கீகரிப்பதுதான். தற்போதுவரை மாற்று பாலினத்தவர்கள் அடைந்துள்ள சில வெற்றிகளைப் பற்றி பேசி வருகிறோம். ஆனால், பெரும்பான்மையான மாற்றுப் பாலினத்தவர்களின் முதன்மையான பிரச்னை அவர்களுக்கான அங்கீகாரம்தான்.
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் அது பற்றி வெளிப்படையாக கூறுவதால் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகள் பற்றிய பார்வை என்ன ?
தான் ஒரு ஹோமோ செக்சுவல் என்று வெளிப்படையாக கூறுவோர் மீது நடக்கும் வன்முறை இங்கு ஏராளம். குறிப்பாக அப்படி வெளிப்படையாக கூறுவதனால் குறிப்பிட்ட நபரின் குடும்பமே அவர்கள் மீது வன்முறை செலுத்தக்கூடிய சூழல் தற்போது நிலவுகிறது. திருநங்கை, திருநம்பி, லெஸ்பியன், பைசெக்சுவல் என்று வெளிப்படையாக கூறுவோருக்கு இங்கு சமூகம் பாதுகாப்பாக இல்லை என்பதே என் கருத்து.
கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான், நான் ஒரு குயர் கம்யூனிட்டியை சேர்ந்தவர் என்று எனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தேன். 2014இல் இருந்து நான் என்னுடைய மாற்று பாலீர்ப்பை உணர்ந்த போதிலும் அதை வெளிப்படையாக சொல்ல எனக்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
இதற்கு முக்கியமான காரணம் ஒருவரின் மாறுபட்ட பாலீர்ப்பை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் மீதான பார்வையும் அவர்கள் மீதான அணுகுமுறையும் மிக மோசமாக இருக்கிறது. நான் வெளிப்படையாக சொன்னபோது, நானே பலவித பிரச்னைகள் எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக என்னுடன் இருப்பவர்கள் என்னை உளவியல் அறிவுரைகள் எடுக்குமாறு கூறினார்கள்.
சமூக முன்னேற்றம் சார்ந்து இயங்கக் கூடிய பல நபர்கள் என்னுடன் பயணித்த போதிலும், அவர்களுக்கு கூட இந்த மாற்று பாலீர்ப்பு கொண்டவர்கள் மீதான புரிதல் என்பது பெரிய அளவில் இல்லை என்பது வருத்தம் அளிக்கக்கூடியது. சமூகப் பிரச்னைகள் சார்ந்து இயங்கக் கூடிய நானே இப்படியான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவர் மாற்று பாலீர்ப்பை வெளிப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால்.
இத்தகைய பிரச்னைகள், மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களை தற்கொலை வரை கொண்டு செல்கிறது. என்னைப் பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் ஓர் அன்பான துணை வேண்டும். அது அவரவர் சார்ந்த விருப்பம். அவர்கள் எந்தப் பாலியல்பு கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் போக்கில் அவர்களை நேசிப்பது இங்கு தேவை என கருதுகிறேன்.
ஒரு திருமணத்துக்குப் பின் தன்னை மாற்று பாலீர்ப்பு கொண்டவராக உணர்ந்து அதை வெளிக்காட்டுவது எத்தகைய அணுகுமுறை ?
நான் முன்பே சொன்னது போல பாலியல்பை உணர்வதற்குகான காலகட்டத்தை யாரும் நிர்ணயிக்க முடியாது. அது ஒரு உணர்வு. அது வெளிப்படும் நேரத்தில்தான் ஒருவர் அதை தெரிந்து கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர் 45 வயதுக்குப் பிறகு மாற்று பாலீர்ப்பை வெளிப்படுத்தினார். இப்படியான சூழலில் திருமணத்திற்குப் பின்பு ஒருவர் மாற்று பாலீர்ப்பை வெளிப்படுத்துவது இயல்பே. பலருக்கு இங்கு அவர்கள் மாற்று பாலீர்ப்பை வெளிப்படுத்திய பிறகும் கட்டாயத் திருமணம் நடத்தப்படுகிறது. இப்படியான அணுகுமுறை என்பது நமது சமூகத்தில் உள்ளது. இதை மாற்ற வேண்டும். இது மாறினால் தங்களுடைய மாற்று பாலீர்ப்பு அடையாளத்தை வெளிப்படையாக சொல்ல பலர் முன்வருவார்கள். அப்படிப்பட்ட திசையில் நம் சமூகம் நகரவேண்டும்.
குயர் சமூகத்திற்கான பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
சட்டரீதியான நடவடிக்கையை மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். குறிப்பாக 2021ஆம் ஆண்டு திருநர் சட்டம் கொண்டுவரப்பட்டது . அதில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக ஒட்டுமொத்த குயர் சமூகத்திற்கான சட்டமாக அது வடிவம் பெற வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் திருநர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அதுபோன்ற இட ஒதுக்கீட்டை முன்னெடுக்க வேண்டும். மேலும், சமூகத்தில் குயர் சமுதாயம் சார்ந்த புரிதல் பரவலாக எல்லா தரப்பினருக்கும் ஏற்படவேண்டும். அதன்மூலம் இவர்கள் மீதான பார்வையை மாற்றி அமைக்க முடியும் என நம்புகிறேன்.