ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆகமொத்தம் திருமணமான முதல் மூன்று மாதங்களில் யார் ஒருவர் சரியாக வாழ்க்கையை புரிந்து நடந்துக் கொள்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுக்க சிறந்து காணப்படும்.
பெரும்பாலும் திருமணமான புதுமணத் தம்பதிகள் செய்யும் சில தவறுகளை சரி செய்துக் கொண்டாலே அவர்கள் வாழ்க்கையை முழுமையாக உணர முடியும். புதிய வாழ்க்கை, இருவர் அடங்கிய உலகம், மனதில் எழும் ஒர்விதமான ஆசைகள் இவற்றை கட்டுப்படுத்தினாலே போதுமானது.
திருமணமானவுடன் நண்பர்கள், உறவினர்களுடன் செலவிடும் நேரத்தை குறைப்பது, அனைத்தையும் விட்டுக் கொடுப்பது, உளறிக் கொட்டுவது என சிலவற்றை நீங்கள் திருமணமான புதிதில் கட்டாயம் செய்யாமல் தவிர்க்க தான் வேண்டும்….
அவசரம் காட்டுதல்
உடலுறவு மட்டுமின்றி மற்ற அனைத்து இல்லற விஷயங்களிலும் கூட உடனே செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதை தவிருங்கள். அந்தந்த விஷயங்கள் அந்தந்த சூழல் அமையும் போது செய்தால் தான் அது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எனவே, நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உடனே செய்து முடிக்க நாளையே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட போவதில்லை.
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை
எதிர்காலம் பற்றிய திட்டமிடுதல் அவசியம். ஆனால், அதற்கென எதிர்காலத்திலேயே வாழ்ந்துவிட வேண்டாம். சில சமயங்களில் நினைத்தது நடக்காவிடில் மனதில் வலி பெரிதாய் ஏற்படும். எனவே, சிந்தனையாக இருந்தாலும் கூட நிதானமாக செயல்படுங்கள்.
விட்டுக் கொடுத்தல்
தம்பதி மத்தியில் விட்டுக் கொடுப்பது முக்கியம் தான். அதற்கென உங்களுக்கு பிடித்ததைக் கூட விட்டுக் கொடுக்க வேண்டும் என்றில்லை. திருமணமான புதியதில் ஓர்வித மோகத்தில் விட்டுக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து சொல்லிக் காண்பிப்பது அல்லது மீண்டும் விட்டுக் கொடுக்க முடியாமல் போனால் சண்டைகள் தான் ஏற்படும். Show
தனி உலகம் வேண்டாம்
உங்கள் நேரத்தை இழக்க வேண்டாம். திருமணம் ஆனவுடன் இருவரும் தனி உலகினுள் சென்றுவிட வேண்டாம். நிறைய பேர் நண்பர்கள், உறவினர் போன்றவருடன் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது பின்னாட்களில் சிறிய பிரிவென்றாலும் மனதளவில் பெரிய வலியை உண்டாக்கும்.
உங்களை போலவே இருக்க வேண்டும் என்ற எண்ணம்
திருமணம் ஆனவுடன் நிறைய பேர், தங்களை போலவே தங்களது துணையும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என நினைப்பது உண்டு. இப்படி இருப்பதால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தான் குறையும்.
கச்சிதமாக இருக்க வேண்டும்
யாராலும் அனைத்து செயல்களிலும் கச்சிதமாக இருக்க முடியாது. எனவே, இதை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
உளறிக் கொட்ட வேண்டாம்
உண்மையை மறைப்பது தவறு தான். ஆனால், உங்கள் இருவருக்குள்ளும் முழு புரிதல், உங்கள் மனநிலை மற்றும் சூழலை அவர் முழுமையாக புரிந்துக் கொள்வார் என்ற நிலை ஏற்படும் வரை அனைத்தையும் உளறிக்கொட்டிவிட வேண்டாம்.
நடிக்க வேண்டாம்
உங்கள் துணையை மகிழ்ச்சியடைய வைக்கிறேன் என்று நடிக்க வேண்டாம். பிறகு வாழ்நாள் முழுக்க நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
கற்றுக் கொள்ளுங்கள்
கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் பிடிக்காத விஷயத்தை மீண்டும், மீண்டும் மறந்தும் செய்துவிட வேண்டாம். தெரிந்தே செய்வது உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.