இந்த பொங்கலுடனே மாற்றம் தொடங்கட்டும் என்பது போல் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின், சந்தானம் இல்லாமல் சோலோவாக அதுவும் ஆக்க்ஷன் ஹீரோவாக களத்தில் குதித்துள்ள படம் இந்த கெத்து.
கதை
குமளியில் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வரும் சத்யராஜ் தன் கெத்தை எங்கும் விட்டு கொடுக்காத நபர். அதுவும் அநியாயத்தை கண்டு பொங்கி எழும் கெத்தான ஆளு. அவருக்கு சாதுவான மகனாக உதயநிதி.
சத்யராஜ் வேலை செய்யும் பள்ளி அருகே முக்கிய வில்லனான மைம் கோபியின் ஒயின் ஷாப் உள்ளதால் மாணவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது. இதை கண்டு சத்யராஜ் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க, வில்லன் ஆட்கள் சத்யராஜை தொந்தரவு செய்கின்றனர், ஒரு கட்டத்தில் மூட சொன்ன பாரில் சத்யராஜை வில்லன் ஆட்கள் அடிக்க வரும் போது சாதுவாக இருக்கும் உதய் அங்கு ஆக்க்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
தன் அப்பாவின் கண் முன்னே முக்கிய வில்லனான மைம் கோபியை அடித்து நொறுக்குகிறார். மறுநாள் மைம் கோபி குமளியில் ஒரு நீர்விழ்ச்சியில் மர்மமான முறையில் செத்து கிடக்கிறார், அவர் கையில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க போலிஸ் அவரை கைது செய்கிறது. இதனிடையே மைம் கோபியின் அண்ணன், அக்காமார்கள் சத்யராஜை போட தவம் கிடக்கின்றனர், இவர்களிடமிருந்து உதய் எப்படி சத்யராஜை காப்பாற்றுகிறார், விக்ராந்த் குமளிக்கு வர என்ன காரணம், இந்த கொலைக்கும் விக்ராந்துக்கும் சம்மந்தம் இருக்குமா? தன் அப்பா குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதே இந்த கெத்து.
சத்யராஜ்
சொல்லவே வேண்டாம் அவரின் நடிப்பை பற்றி, இருந்தாலும் தன் பங்குக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக யதார்த்தமாக செய்துள்ளார், தான் குற்றமற்றவன் என்பதை உதய்க்கு உதவியாக அவரும் போராடுவது உண்மையை காட்டுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
இம்முறை தனக்கு மாற்றம் தேவை என்பதை நன்கு உணர்ந்து உதய் சோலோவாக ஆக்க்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டு சண்டை போடுவது அவர் முகத்திலே தெரிகிறது. சில இடங்களில் செயற்கையான முகபாவனை செய்வது காட்சியை பலவீன படுத்துகிறது அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
எமி ஜாக்சன்
புக் திருடியாக வரும் எமி ஜாக்சன், தன் அப்பாவின் கனவான டிடி தொலைக்கட்சியில் செய்தி வாசிப்பாளராக ஆவதே லட்சியம் என்று இருப்பவர். இந்த புக் திருடும் பழக்கத்தால் உதய்யிடம் சிக்கி அவர் சொல்லும் வேலையெல்லாம் செய்து கடைசியில் அவர் காதல் வலையில் விழுகிறார், முதல் பாதியில் அவரை வைத்தே பல காட்சிகளை நகர்த்தியுள்ளார் திருகுமரன். அவற்றின் கதாபாத்திரம் பல படங்களில் பார்த்த டெம்ப்லேட். படத்தின் காமெடியிலும் கருணாகரனுடன் முக்கிய பங்கு வகிக்கிறார் எமி.
விக்ராந்த்
படத்தில் சொல்லும் படி வசனம் இல்லை என்றாலும், தன் பார்வையாலே மிரட்டுகிறார். உண்மையான கெத்தே இவர் தான், படத்திற்கு இவர் தான் மிக பெரிய பலம். ஏதோ செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரை காட்டும் போதே தொற்றி கொள்கிறது.
கிளாப்ஸ்
1. விக்ராந்த் கதாபாத்திரத்துக்கு கொடுத்த முக்கியத்துவம்
2. இரண்டாம் பாதி மற்றும் எதிர்பார்காத சில ட்விஸ்டுகள்
3. ஹாரிஸின் பின்னணி இசை
பல்ப்ஸ்:
1. விறுவிறுப்பு இல்லாத முதல் பாதி
2. சத்யராஜின் கதாபாத்திரத்துக்கு இன்னும் கூடுதல் பலம் சேர்த்திருக்கலாம்.
3. தில்லு முல்லு பாடலை தவிர மற்ற பாடல்கள் எடுபடவில்லை
4. விறுவிறுப்பு கூடும் இடத்தில் தேவை இல்லாத பாடல்
மொத்தத்தில் கெத்து – உதய்யின் ஆக்க்ஷனுக்காகவும், விக்ராந்தின் மிரட்டலான நடிப்புக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்.