நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
நேற்று படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு பொழுதை கழித்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வர வேண்டியவர் வரவில்லை.
இதையடுத்து அவருக்கு பலமுறை அழைப்பை மேற்கொண்டும் அவர் அதனை எடுக்கவில்லை. நேரில் சென்று பார்த்தபோது அவர் உணர்ச்சியின்றி கிடந்தார்.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கல்பனா திடீர் என்று மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்பனா மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அவர்களின் மகள் ஸ்ரீமயி கல்பனாவுடன் வசித்து வந்தார்.