இலங்கையின் 68ஆவது தேசிய சுதந்திரத் தின விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணி தெரிவித்துள்ளது. இந்த முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமர்சித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிகழ்விலேயே, மகிந்த ஆதரவு அணியின் சுதந்திரத் தின புறக்கணிப்பை அவர் விமர்சித்தார்.
‘தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என்று அன்று பிரபாகரன் சொன்னதைப் போல, இன்று சிங்களவர்கள் என்று பெருமைப்படுகின்ற தலைவர்கள் அந்தத் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் என்று கூறுவது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. எந்தக் கொடியை காண்பிப்பது-புலிக்கொடியையா காண்பிக்கச் சொல்கிறார்கள்’ என்றார் ரணில்.
ஆனால், தேசிய சுதந்திர தின விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அழைப்பு கிடைத்தாலும் அந்த விழாவில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
‘இந்த விழாவில் கலந்துகொள்வதில்லை என்று பொது எதிரணிக் கூட்டணியாக முடிவுசெய்துள்ளோம். எங்கே சுதந்திரம் இருக்கின்றது. என்னைப் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை கடந்துபோய்விட்டது என்று நான் நம்புகின்றேன். என்னைப் பழிவாங்குவதற்காக எல்லா ராஜபக்ஷக்களையும் பழிவாங்குகிறார்கள்’ என்றார் மகிந்த ராஜபக்ஷ.
இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் ஆட்சியதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான கடற்படை அதிகாரி யோஷித்த ராஜபக்ஷ நிதி மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த சனிக்கிழமை முதல் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.