நாயகி வைதேகி பெரிய குடும்பத்து பெண். தனது தந்தை நடத்தி வரும் கல்லூரியிலேயே படித்து வருகிறார். நாயகன் அருண் பத்மநாபன் அதே ஊரில் பொதுக் கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். மேலும் சமூக சேவையிலும், ஒரு பேக்கரியிலும் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார்.
ஒரு நாள் வைதேகி படிக்கும் கல்லூரியில் விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு நாயகன் ஒரு கேக் கொண்டு வருகிறார். அதில் எழுதப்பட்ட கவிதையை வைதேகி ரசிக்கிறார். இந்த கவிதை எழுதியவர் அருண் என்பதை தெரிந்து, அவர் மீது காதல் வயப்படுகிறார்.
தன் காதலை சொல்லி அருணையே சுற்றி சுற்றி வருகிறார். ஆனால், அருணோ காதல் இருந்தும் ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனால் வைதேகி, அருண் மீது உள்ள காதலால் விடாபிடியாக இருக்கிறார்.
ஒரு நாள் அருணிடம், நீ காதலிக்கிறாய் என்றால் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கட்டளை இடுகிறார். அப்படி வரவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வேன் என்றும் மிரட்டுகிறார். குறிப்பிட்ட இடத்திற்கு அருண் வருகிறார். ஆனால், வைதேகியால் வரமுடியவில்லை. வைதேகியின் அப்பா இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை போக விடாமல் தடுக்கிறார்.
இறுதியில் அருணும், வைதேகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் அருண், பொது கழிப்பிடத்தை நடத்துபவராக நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை கவிதை எழுதுபவராக உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், இவர் கவிதை பேசும்போது, கவிதைக்குரிய உணர்வு எடுபடாமல் இருக்கிறது. கதாபாத்திரத்தை எதார்த்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.
நாயகி வைதேகி, பணக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். பணக்கார பெண்ணுக்கான அந்தஸ்து இவருக்கு இல்லை. ஒரு நடுத்தர பெண் போன்றே தோற்றமளித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தி நடித்திருக்கலாம்.
உயர்தர வர்க்கத்து பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட வர்கத்து பையனுக்கும் ஏற்படும் காதலை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் மகேந்திர கணபதி. படத்தை கவிதைத்துவமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. காட்சியும் வசனமும் கதை ஓட்டத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம்.
சௌந்தர்ய நந்தகுமார் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘நனையாத மழையே’ நனையவில்லை.