பட்டப்படிப்பு படித்து விட்டு சென்னையில் வேலை செய்து வருகிறார் நாயகன் தமன். இவர் சீனாவிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். சீனா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டு, சில நாட்கள் பெற்றோர்களுடன் இருக்க சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு செல்கிறார். இவருடைய அப்பா ஊரில் பெரிய மனிதர்.
ராமநாதபுரத்தில் பெரிய தாதாவாக இருப்பவர் போலீசை கைக்குள் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். போலீஸ் இவர் கைக்குள் இருந்தாலும், போலீஸ் இவர்மேல் விரோதமாகத்தான் இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இதே ஊரில் படிக்கும் நாயகி சம்ஸ்க்ருதியை பார்த்த உடன் காதல் வயப்படுகிறார் தமன். தன் காதலை சம்ஸ்க்ருதியிடம் சொல்ல, அவரோ என் அம்மா இல்லாமல் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவள், என் அப்பாவை விட்டு என்னால் வர முடியாது என்று சொல்லி தமனின் காதலை மறுக்கிறாள்.
இதனால் மிகுந்த வருத்தத்துடனே சீனாவிற்கு கிளம்புகிறார். அப்போது ஒரு மர்ம கும்பல் தமனை வழிமறித்து கொலை செய்ய முயற்சிக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக நாயகி சம்ஸ்க்ருதியை அந்த கும்பல் வெட்டி விடுகிறது.
இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? தமனை அவர்கள் வெட்ட முயற்சிப்பது ஏன்? சம்ஸ்க்ருதி உயிர் பிழைத்தாரா? தமன், சம்ஸ்க்ருதி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இதுவரை நகரத்து பையனாக நடித்து வந்த தமன், முதல் முறையாக கிராமத்து பையனாக நடித்திருக்கிறார். முறுக்கு மீசை வைத்து கிராமத்து இளைஞனுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் பெற்று யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரையில் பார்க்க மிகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார்.
நாயகி சம்ஸ்க்ருதி கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடிக்கு தனி ஒருவனாக நின்று தன்னால் முடிந்தவரை ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார் சிங்கம் புலி.
படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் நாயகிக்கு தாய்மாமாவாகவும் நடித்திருக்கிறார் கேந்திரன் முனியசாமி. முதல் பாதியில் ஆக்ரோஷமான ரவுடியாகவும், இரண்டாம் பாதியில் பொறுப்பான தாய்மாமாவாகவும் மனதில் பதிகிறார்.
வீரம் மிகுந்த மண்ணின் கதையை வீரத்தோடு சொல்லி, அதை ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இயக்கியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார்.
வி.டி.பாரதி, வி.டி.மோனிஷ் என இரட்டையர்களின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். முத்துராமலிங்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவில் படத்தை பார்க்கும்போது அதிக பட்ஜெட்டில் உருவான படம் போல் இருக்கிறது.
மொத்தத்தில் ‘சேது பூமி’ வீரம் விளைந்த மண்.