அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த செய்தி ஏற்கெனவே உறுதியானதுதான்.
ஆனால், இந்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி அப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், அது உறுதியான தகவலாக வெளிவரவில்லை.
இந்நிலையில், எழுத்தாளர் பாலகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறும்போது, ‘அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்‘ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதிலிருந்து, அஜித் சரித்திர பின்னணியில் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் முடிந்ததும், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.