மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1½ ஆண்டு ஜெயிலில் இருந்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டு சிறை வாசத்துக்காக சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் பல்வேறு சந்தர்ப்பங்களில் பரோலில் வெளிவந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு மத்தியில், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபத்தில் மராட்டிய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சிறை தண்டனை முடியும் 114 நாட்களுக்கு முன்பு, அதாவது வருகிற 25-ந் திகதி (நாளை மறுதினம்) அவர் விடுதலை செய்யப்பட இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.