சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது பேஸ்புக் நிர்வாகம்.
பிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கரும் கூட. இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.
பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.
பேஸ்புக்கின் இந்த குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் ஆனந்த் பிரகாஷ். இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த குறையை சரி செய்துள்ளது அந்த நிறுவனம்.
மேலும் பேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு 15000 டாலர் அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்.