தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது. கூட்டணி, பிரசாரம், ஓட்டுசேகரிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாகி உள்ளன. தேர்தல் பணிகள் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளால் படப்பிடிப்புகளுக்கு லட்சக்கணக்கில் பெரிய தொகைகளை எடுத்துச்செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு மேல் சினிமா பணிகள் முடங்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யும் நடிகர்-நடிகைகள் படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தேர்தல் பணிகளில் குதிக்க தயாராகிறார்கள்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின் வரி விலக்கு பெறுவதில் சிக்கல் இருப்பதால், பெரிய பட்ஜெட் படங்களை தேர்தல் முடிந்து புதிய அரசு வந்த பிறகு வெளியிடலாம் என்று தள்ளி வைத்து விட்டனர். ஆனால் தணிக்கை முடிந்து ஏற்கனவே வரிவிலக்கு பெற்ற சிறு பட்ஜெட் படங்களை தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.
தேர்தல் நெருங்கும்போது வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் அவசரம் அவசரமாக அவை தியேட்டருக்கு வருகின்றன. தமிழ் நாடு முழுவதும் தற்போது 1069 திரையரங்குகள் உள்ளன. பெரிய படங்கள் வராததால் சிறு படங்களுக்கு தாராளமாக தியேட்டர்கள் கிடைக்கும் சூழ்நிலையும் உள்ளன.
நாளை (வெள்ளிக்கிழமை) மட்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள காதலும் கடந்து போகும், விமல்-அஞ்சலி நடித்துள்ள மாப்ள சிங்கம் மற்றும் அவியல், என்னை பிடிச்சிருக்கா, கோடைமழை, நட்பதிகாரம் ஆகிய 6 படங்கள் வெளியாகின்றன. தொடர்ந்து 30 படங்களை தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.