நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
இதனால் கலாபவன் மணி விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? என்பதை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஐ.ஜி. அஜீத்குமார் உத்தரவுபடி 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலாபவன்மணியின் உதவியாளர்கள், அவரது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் பங்கேற்றவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
தற்போது கலாபவன் மணி மரணம் சொத்து தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளது. ஏற்கனவே நடிகர் கலாபவன்மணியின் மனைவி நிம்மியிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கலாபவன் மணியின் மாமனார் சுதாகரனை சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கலாபவன்மணிக்கும் அவரது மனைவிக்கு சுமூகமான சூழ்நிலை நிலவியதா? பணம் சம்பந்தமாக பிரச்சினை ஏதும் ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கலாபவன்மணியின் சகோதரர் ராதாகிருஷ்ணன் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்த ஒரு வாலிபர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். இவர் அடிக்கடி கலாபவன் மணியின் பண்ணை வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
பண்ணை வீட்டில் மது விருந்து நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் மது விருந்து நடந்த மறுநாளும் அவர் அங்கு வந்துள்ளார். கலாபவன்மணியின் உதவியாளர்களுக்கும் அந்த வாலிபருக்கும் தொடர்பு இருந்து உள்ளது.
மேலும் இவர் கலாபவன் மணியின் பண்ணை வீட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.