ஜீ தமிழில் ´சொல்வதெல்லாம் உண்மை´ நிகழ்ச்சி நடத்தி என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வார்த்தையை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடத்த வருகிறார். ஏப்ரல் முதல் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை முதலில் நிர்மலா பெரியசாமி நடத்தி வந்தார். அவரைத் தொடர்ந்து திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
திடீரென்று அந்த நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து விலகினார் லட்சுமி ராமகிருஷ்ணன். திரைப்பட இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்தப் போவதால் அதிலிருந்து விலகுவதாக கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இவருக்கு பதிலாக இவர் என்பது போல சுதா சந்திரன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்தார். லட்சுமி ராமகிருஷ்ணனின் அதட்டலும் உருட்டலுமே அவர் மாற்றப்பட்ட காரணமாக அமைந்தது என்றது சேனல் தரப்பு அதெல்லாம் பழைய கதை. இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் நிகழ்ச்சிக்கு வருகிறார்.
சுதா சந்திரன் செய்யும் பஞ்சாயத்து பரபரப்பாக இல்லையோ என்னவோ? நிகழ்ச்சியின் டிஆர்பி டவுன் ஆனது. எனவே சொல்வதெல்லாம் உண்மையை தூக்கி நிறுத்த மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனையே அணுகியது சேனல் தரப்பு. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வார்த்தையை சில வாரங்களுக்கு முன்பு ஒரு பிரபல அரசியல் கட்சி கூட ஆளும் கட்சியை விமர்சனம் செய்ய பயன்படுத்தியது.
இதையெல்லாம் பார்த்து யோசித்த சேனல் தரப்பு, லட்சுமி போட்ட கண்டிசன்களுக்கு ஒத்துக்கொண்டது. எனவே ஜீ தமிழில் மீண்டும் பஞ்சாயத்தை தொடங்கி விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஏப்ரல் 4 முதல் இவர் நடத்தும் பஞ்சாயத்துக்கள் இனி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும். இனி மீண்டும் தன்னுடைய டிரேட் மார்க் வார்தையான என்னம்மா இப்படி பண்றீங்களேம்மாவை உபயோகிப்பார் என்பதை எதிர்பார்க்கலாம்! ஆனால் போலீசை கூப்பிடுவேன் என்று சொல்வாரா தெரியலையே?