மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா (வயது 24) சமீபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்கும் பொருட்டு, முன்ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் ராகுல் சிங் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி மிருதுளா பத்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நிறைவில் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரருக்கும் (ராகுல்சிங்), பிரதியுஷாவுக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது சாட்சிகளின் வாக்குமூலம் மூலம் தெரியவருகிறது. அதேசமயம், பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்தவொரு முதல் நிலை ஆதாரமும் இல்லை’’ என்றார்.
முன்னதாக, பிரதியுஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், ராகுல் சிங்குக்கும் இடையே நடைபெற்ற கடைசி தொலைபேசி உரையாடலையும் நீதிபதி மிருதுளா பத்கர் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.