நாயகி மாளவிகா மேனன், தாய் மற்றும் தங்கையுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறாள். விளம்பர மாடலாக நடித்து வரும் இவருடைய வருமானத்தை எதிர்பார்த்துதான் அவரது குடும்பமே இருக்கிறது. இவருடைய காதலன் அகில் குமார். ஒருநாள் இரவில் பீச்சில் தனிமையில் அமர்ந்திருக்கும் மாளவிகா மேனன், தனது காதலனுக்கு போன் போட்டு அங்கு வரச்சொல்கிறார்.
அவர் கிளம்பி வரும் வேளையில் விபத்தில் சிக்குவதால் சரியான நேரத்தில் பீச்சுக்கு வரமுடியவில்லை. இதனால் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு கிளம்புகிறார் மாளவிகா. தனிமையில் செல்லும் அவரை ஆட்டோ டிரைவர் ஒரு ரவுடி கும்பலிடம் மாட்டிவிடுகிறான். அவர்கள் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள்.
இதிலிருந்து தப்பித்து ஓடும் நாயகி ஒரு பெரிய செல்வந்தரிடம் அடைக்கலம் தேடி செல்கிறாள். அந்த செல்வந்தர் இவளை துரத்தி வந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அந்த செல்வந்தர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாயகி, அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள்.
அப்போது, அந்த செல்வந்தரின் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார். நண்பர் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், நாயகி ஓடுவதையும் கண்டு அவள்தான் இந்த கொலையை செய்திருப்பாள் என்று அவளை துரத்தி செல்கிறார். செல்லும் வழியில் நாயகன் வரவே, அவனுடன் பைக்கில் ஏறி இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்து தப்பிக்கிறாள். நாயகன் அவளை நேராக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.
நாயகனின் பைக் நம்பரை வைத்து மோப்பம் பிடித்து நாயகனுடைய வீட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். அங்கு, நாயகன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அங்கிருக்கும் நாயகியை பிடித்து அவளை விசாரணைக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியில் வழிப்பறி கும்பலை பிடிக்கப்போகும் இன்ஸ்பெக்டரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இப்படி தொடர்ச்சியாக நாயகியை சுற்றியே கொலைகள் நடக்க காரணம் என்ன? இவர்களை கொலை செய்தது யார்? என்பதுபோன்ற மர்ம முடிச்சுகளுக்கு இறுதியில் விடை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகி மாளவிகா மேனன் பார்க்க அழகாக இருக்கிறார். காதல், வன்மம் ஆகிய காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கதை முழுக்க இவரை சுற்றியே நடப்பதால், தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனாக வரும் அகில் குமார், மாறுபட்ட கோணங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
இயக்குனர் ஸ்ரீனிவாசன் தலைப்பை கேள்விக்குறியாக வைத்துவிட்டு, அதை படமாக்கி நம்மையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார். இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெரும்பாலான காட்சிகள் கதையோடு ஒட்டாத மாதிரியே உள்ளதால், நாயகியின் கதாபாத்திரத்தின் தன்மை வலுவிழந்து, படம் ரசிக்கும்படியாக இல்லை. இருப்பினும், இறுதியில் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சுபுசிவாவின் இசையில் முதல் பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜசேகரனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் நிஜமா நிழலா.. கேள்விக்குறிதான்.