தொடரும் வேலை வாய்ப்பின்மையால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் சின்னத்திரை கலைஞர்கள். நேற்று முன்தினம் சாய்சக்தியின் ஆடியோவைத் தொடர்ந்து இன்றைக்கு மற்றொரு சின்னத்திரை நடிகை வாட்ஸ் அப் ஆடியோவில் குமுறியுள்ளார்.
“என் பேர் நிலானி. நானும் ஆர்டிஸ்ட்தான். உங்கள்ல்ல பல பேருக்கு என்னைத் தெரிஞ்சிருக்கலாம். சாய் சக்தி நேத்து பேசினதுக்கப்பறம் ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த வார்த்தை சத்தியமான உண்மை. நானும் அதுல பாதிக்கப்பட்டிருக்கேன். இன்னைக்கு ஆர்டிஸ்ட்னு வெளி உலகத்துல ரொம்ப கௌரவமா பார்க்கப்படற நம்மளோட உண்மையான நிலைமை என்னான்னா தரை மட்டத்துலதான் இருக்கோம். நானும் ஒரு சிங்கிள் பேரண்டா என் குழந்தைகளோட வாழ்றதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டிருக்கேன். காரணம் பாலிடிக்ஸ். சின்னத்திரைல இருக்கற பாலிடிக்ஸ்.
நம்ம 12 மணிநேரம் லைட்ல நின்னு உழைச்சு கஷ்டப்படறதுக்குண்டான சம்பளம் நமக்கு கிடைக்கறதில்லை. இன்னைக்கு ரோட்ல போனவங்க, வந்தவங்க, ரிட்டயர்டானவங்க டைம்பாஸுக்குன்னு எல்லாரும் நடிக்க வந்துட்டாங்க. ஒவ்வொரு ப்ரொஃபஷன்ஸ்… அதாவது ஏர் ஹோஸ்டஸ், ஐடி டிபார்ட்மெண்ட், எஞ்சினியரிங்னு எல்லா துறையில இருந்தும் நடிக்க வந்துட்டாங்க. ஆனா நடிப்புதான் எல்லாமேன்னு கூத்துப்பட்டறையெல்லாம் போய் நடிப்பைக் கத்துகிட்டு வந்த நம்ம இப்ப நடுத்தெருவுல நிக்கறோம்.
மகேஷோட நிலைமை உங்க எல்லாருக்குமே இருக்கும். எனக்கும் இருக்கு. ஒரு ப்ராஜக்டை முழுசா வரும்னு நம்பி குடுக்கறாங்க. மாசத்துல ஒரு சீரியல்ல பத்து நாள் நாம வருவோம்னா, ஷூட் போறதென்னவோ ரெண்டு மூணு நாள்தான். அல்ரெடி ரெண்டு ப்ராஜக்ட் கமிட் ஆயிருக்குன்னா வேற ப்ராஜக்ட் தரமாட்டீங்கறாங்க. டேட்ஸ் ப்ராப்ளம் வரும், முடியாதுங்கறாங்க.
கடந்த ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச் மூணு மாசமும் நான் எந்த ஷூட்டும் போகல. ஆனா ரெண்டு சீரியல் நான் பண்ணீட்டிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா ஒருநாள் வேலை கூட இல்லை.
ப்ரொடக்ஷன்ல இருக்கறவங்க யோசிக்கணும். த்ரோ அவுட்டா நடிக்கற ஆர்ட்டிஸ்ட்ஸ் இத நம்பித்தான் இருக்காங்க.. மாசத்துல ரெண்டு மூணு நாளாச்சும் குடுக்கணும்னு அவங்க யோசிக்கணும். ஆனா எங்களை பத்தி யாரும் கவலைப்படறதில்லை.
என்னை மாதிரி சிங்கிள் பேரண்டா இருந்தாத்தான் இந்தக் கஷ்டம் தெரியும். நான் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட். திறமை இருக்கு. ஆனா திறமைக்கு இங்க மரியாதையே இல்லை.
எங்க தப்பு நடக்குது? எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனா யாருமே வெளில சொல்ல வெக்கப்பட்டுட்டு கூச்சப்பட்டுட்டு எல்லாருமே அமைதியாத்தான் இருக்கோம். கௌரவம்ங்கற போர்வைக்குள்ள எல்லாரும் ஒளிஞ்சிட்டிருக்கோம். கடவுள் செயலால எதோ இந்த நிமிஷம் வரைக்கும் போய்ட்டிருக்கு. ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாம கடன் வாங்கியிருக்கேன். கொடுமை என்னன்னா ஆர்டிஸ்டா இருந்து, கடன் கூட கேட்க முடியாம வெக்கமா இருக்கும். ஸோ, இந்த நிலைமை தயவு செய்து மாறணும். இல்லைன்னா சாவுகள் தொடர்ந்துட்டு இருக்கும்.
யாரு பூனைக்கு மணிகட்டறதுன்னு தெரியல. எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லாருக்கும். சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இந்த வேண்டுகோளை விடுக்கறேன். எல்லாருமா சேர்ந்து முடிவை மாத்தணும். 12 மணிநேரத்துக்கு 1500, 2000ன்னு அஞ்சு, பத்து வருஷத்துக்கு முந்தி இருந்த சம்பளம்தான் இப்பவும்.
இது புது ப்ராஜக்ட், நியூ சேனல்.. இதுல நடிங்க.. அப்பறம் வாங்கிக்கலாம்னு எங்க வாய்லயும் வயித்துலயும் அடிச்சா நாங்க எங்கதான் போறது? எவ்ளோநாள்தான் இலவசமா நடிக்கறது? இதுலவேற ரெண்டு ப்ராஜக்ட்ல நடிச்சா மொத்த டேட்டையும் ப்ளாக் பண்ணி வெச்சுட்டு மாசத்துல வெறும் ரெண்டு நாள் சான்ஸ் தர்றாங்க.
ஒரு தரப்பினர் மட்டும் இத யோசிச்சுப் ப்ரயோஜனமில்லை. எல்லாரும் யோசிக்கணும். ஆர்ட்டிஸ்டா இருக்கற அத்தனை ஃப்ரெண்ட்ஸும் ஒண்ணு சேருவோம். இதுக்கொரு முடிவெடுக்கணும். இதச் சொல்ல நான் கூச்சப்படல. கண்ணு முன்னாடி உயிர்கள் போயிட்டிருக்கறப்ப, எனக்கென்னன்னு சுயநலமா இருக்க விரும்பல. தயவுசெஞ்சு திரும்பிப் பாருங்க. எத்தனை பேர் வாய்ப்பில்லாம இருக்காங்கன்னு. ப்ளீஸ் எல்லாருமா சேர்ந்து முடிவெடுப்போம்’இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது.
இந்த ஆடியோ உண்மையா என அறிந்துகொள்ள நிலானியைத் தொடர்பு கொண்டோம், சாய் சக்தியைப் போலவே மறுமுனையில் அதே சோகம், சேனல்கள் எங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக்கிறாங்க. ஒரு சேனல் தனக்கு அவங்களுக்கு வேண்டிய மக்களை மட்டுமே வெச்சு சீரியல் எடுக்கறாங்க, இன்னொரு சேனல் ஒரு சீரியல்ல வந்த நடிகர்கள இன்னொரு சீரியல்ல நடிக்க விடறதே இல்லை. இன்னொரு சேனல் அவங்க சேனல் தவிர்த்து வேற எந்த சேனலுக்குள்ளயும் நுழையவே கூடாதுன்னு சொல்றாங்க. இதுக்கு நடுவுல டப்பிங் சீரியல்களோட ஆதிக்கம் வேற.. எங்கங்க போவோம் நாங்க. இதுல மூணு மாசத்துக்கு ஒரு தடவ வர மூணு நாள் கால்ஷீட்டுக்காக நாங்க மாசக்கணக்குல உக்காந்திருக்கணும். என்ன பாவம் பண்ணினோம்.
ஒரு நாளு கால்ஷீட்டுக்கு மூணாயிரத்திலிருந்து நாலாயிரம் தான் அதுல நாங்களே மேக்கப், காஸ்டியூம், சில நேரங்கள்ல இரண்டு நாளைக்கு 7 , 8 காஸ்டியூம்கள் கூட கேப்பாங்க, ஒரு தடவ பயன்படுத்துன காஸ்டியூம இன்னொரு தடவ பயன்படுத்தக் கூடாது. உதாரணத்துக்கு பணக்கார கேரக்டர்னா, அதுக்கான சேலை வாங்கி, கட்டிட்டு ஷூட்டிங் போகணும்.. அதே ரெண்டு நாள்னா 10 நாட்களுக்கான ஷூட்டிங் நடக்குதுன்னு வைங்க, பத்து சேலை நாங்க வாங்கி கட்டிட்டு நடிக்கணும்.. ஒரு தடவ கட்னத மறுபடி வேற சீரியல்ல, வேற காட்சிகள்லகூட கட்டக்கூடாது.
கண்டிப்பா ரசிகனோட பார்வைல இதெல்லாம் முக்கியம்தான். ஆனா அதுக்கான வருமானம் வேணும் அல்லவா? மாசத்துல ரெண்டு மூணுநாள் மட்டுமே ஷூட்டிங்னா, இதெல்லாம் எப்படி பண்ண? முறைப்படி கூத்துப்பட்டறை நடிப்பு கத்துக்கிட்டு சங்கத்துல உறுப்பினராகி அனுபவத்தோட வந்தா, ஆயிரம் ரூபா வாங்கிகிட்டு யார் யாரோ நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க போவோம். எங்களுக்கான சங்கம் ஒரு வரைமுறையே இல்லாம இருக்கு. யார் கிட்ட சொல்றதுன்னு தெரியலை. இந்த வாட்ஸப் ஆடியோ அனுப்பினதும் பலரும் பண உதவி வேணுமான்னு கேக்கறாங்க. எங்களுக்கு வேலை குடுங்க போதும் என்கிறார் நிலானி.
தொடரும் சின்னத்திரை நடிகர், நடிகையரின் ஆதங்கங்களை சின்னத்திரை நடிகர் சங்கம் செவிமடுத்து விரைவில் ஏதேனும் தீர்வு எடுக்கும் என்று நம்பப்படுகிறது.