புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீப்ரியங்கா, வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் இயல்பாக நடிப்பவர். தமிழ்ப் பெண்ணான தனக்கு தமிழ் சினிமாவில் உரிய இடம் வேண்டும் என உரிமையாகக் கேட்டு வருபவர். இப்போது ‘சாரல்’ உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டுள்ளார். இது குறித்து காரணம் கேட்டபோது, “பிரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டேன். மேலும் நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள்.
என்னுடைய நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன். மேலும் நான் நடித்துள்ள ‘ரீங்காரம்’ படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. இவை தவிர இன்னும் சில படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என காத்திருக்கிறேன்.
நான் நடிக்கவிருக்கும் ‘திருப்பதி லட்டு’ படம் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது,” என்றார்.