தமிழகத்திலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி 10, 11-ந் திகதிகளில் (நேற்றும், இன்றும்) தமிழகத்திலும், கேரளாவிலும், புதுச்சேரியில் உள்ள காரைக்காலிலும் தேர்தல் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று அவர் தமிழகத்தில் நாகர்கோவிலிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும், கேரள மாநிலம், காயங்குளம், அங்கமாலி, பட்டாம்பி மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இதன் காரணமாக அவர் திட்டமிட்டபடி 3 மாநில தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து குறுந்தகவல்கள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருந்ததாவது:-
ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எனவே நான் திட்டமிட்டபடி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. அந்த மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பை தவற விடும்படி ஆகி விட்டது. இந்த மாநிலங்களை சேர்ந்த மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனது பயணம் மாற்றியமைக்கப்பட்டு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.