இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகன் ராகுல், தீவிர விஜய் ரசிகர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதையே விட்டுவிட்டு விஜய் படம் பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். இதனால், இவரது வீட்டில் அனைவரும் இவரை திட்டி தீர்க்கின்றனர்.
இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார். சென்னையில் இயக்குனர் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்கிறார். ராகுலின் கதை சொல்லும்விதம் பாக்யராஜுக்கு பிடித்துவிடவே, அவருக்கு தெரிந்த உதவி இயக்குனருடன் இவரை சேர்த்துவிடுகிறார்.
ஆனால், அந்த உதவி இயக்குனர் ராகுலிடம் தவறாக நடக்க முயற்சிக்க அங்கிருந்து வெளியேறுகிறார் ராகுல். பின்னர் தனது தோழியின் சிபாரிசின் பேரில் மற்றொரு இயக்குனருடன் இணை இயக்குனராக பணியில் சேர்கிறார். அங்கும் இவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இப்படி இவர் இயக்குனராக ஆவதில் தொடர்ந்து சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த சிக்கல்களை எல்லாம் சமாளித்து அவர் இயக்குனராகி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ராகுல் இளம் கதாநாயகனாக துடிப்பு மிக்கவராக வலம் வருகிறார். பாடல் காட்சிகளில் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடம் பெரிதளவில் எதிர்பார்க்க முடியவில்லை. அதேபோல், நாயகி ஐஸ்வரியாவுக்கு படத்தில் பெரிதான கதாபாத்திரம் இல்லை. இருந்தாலும், தனக்கு எது வருமோ? அதை சரியாக செய்திருக்கிறார்.
படத்தில் போஸ் வெங்கட், பட்டிமன்றம் ராஜா, இயக்குனர் பாக்யராஜ் என மிகப்பெரிய கதாபாத்திரங்கள் இருந்தும், கதையை ரசிப்பதற்குண்டான சுவாரஸ்யம் ஒரு காட்சியில்கூட இல்லை. இயக்குனர் ஜான் விக்னா, ஒரு இளைஞனின் இயக்குனராகும் கனவு, அதில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களையும், இறுதியில் அந்த இளைஞன் கையாளும் யுக்திகளையும் பொறுப்புணர்வுடன் படமாக்க நினைத்திருக்கிறார். ஆனால், படம் எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் நகர்வது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், படத்தின் கணேஷின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டவில்லை. நெக்சிடோ இசையில் விஜய் பற்றிய பாடல் மட்டும் ரசிக்க தோன்றுகிறது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘அதரவெப்போம்’ அதரவில்லை.