நாயகன் விஜய்குமாரும் மூன்று நண்பர்களும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இவர்கள், வகுப்பு நேரத்தை தவிர தாபா என்னும் பெயரில் மைம் கோபி நடத்தி வரும் பாரில் தான் அதிக நேரம் குடித்து வருகிறார்கள்.
இந்த பாரில் விஜய் குமாரின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இதன்பிறகு ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகன் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.
இந்த பிரச்சினையை வைத்து அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கிறார் மைம் கோபி. இதனால் மாணவர்களுக்கு ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எங்கு முடிந்தது. மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அதுபோல் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பு திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
அடிதடி, வன்முறையை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். படம் ஏ சான்றிதழுடன் வெளிவந்திருக்கிறது. அதற்கேற்போல் படத்தில் சண்டை, வெட்டு குத்து என அதிகமாகவே இருக்கிறது. வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்க்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சுப்ரமணியபுரம் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆண்டனி தாசன், மசாலா காபி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசையை ஓரளவு ரசிக்க முடிகிறது. பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘உறியடி’ சரவெடி.