சென்னை அடையாறில் காரில் சென்ற ஒரு பெண் திடீர் பிரேக் போட்டதால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் காரின் பின் பகுதியில் மோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் 2 இளைஞர்களும் தகராறு செய்ததாகவும், அந்த வழியாக சென்ற நடிகர் சூர்யா இந்த பிரச்சினையில் தலையிட்டு பெண்ணிடம் தகராறு செய்த பிரேம்குமார் என்ற இளைஞரை அடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சூர்யா மீது பிரேம்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், திடீரென்று பிரேம்குமார் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புஷ்பா கிருஷ்ணசாமி என்று தெரிய வந்துள்ளது. அவர் நடந்த சம்பவத்தை விளக்கியும், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘‘காரில் சென்ற என்னை 2 இளைஞர்கள் திட்டினார்கள். பயமுறுத்தினார்கள். அவர்கள் இருவரும் எனது கார் கண்ணாடியை உடைத்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள். என்னை காருக்குள் ஏற விடாமல் தடுத்தார்கள். என்னிடம் பணம் கேட்டும் தொல்லை கொடுத்தார்கள். என்னை பயமுறுத்திய அந்த இரண்டு இளைஞர்களுக்கும், வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கும் மத்தியில் நான் தனியாக நின்று தவித்தேன்.
அவர்கள் இருவரும் யாருக்கோ போன் செய்து எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார்கள். அந்த இளைஞர்களிடம் இருந்து என்னை காப்பாற்றிய சூர்யாவுக்கு நன்றி. பிரச்சினை நடந்த நேரத்தில், உங்களின் காரை நிறுத்தினீர்கள். அந்த இளைஞர்களிடம், ‘‘பெண்ணை தொடக்கூடாது’’ என்று அறிவுரை கூறினீர்கள். உங்களின் தலையீடு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தது.’’
இவ்வாறு ‘டுவிட்டரில்’ புஷ்பா கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.
சூர்யாவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘நடந்த நாடகத்துக்கு நடுவில் உண்மை நிலையை வெளியிட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.