உத்தரபிரதேச மாநிலம் குதார்நகரம் அருகேயுள்ள பர்பத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குர்தேவ்சிங்.
இவர் ஜாக்கி என்ற 4 வயது நாயை தன்னுடன் செல்லமாக வளர்த்து வந்தார். இவரது கிராமத்துக்கு அருகே துக்வா தேசிய பூங்கா என்ற வனச் சரணாலயம் உள்ளது.
சம்பவத்தன்று குர்தேவ் சிங் தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது அருகில் நாய் ஜாக்கியும் படுத்திருந்தது. அப்போது அருகேயுள்ள வனச் சரணாலயத்தில் இருந்து ஒரு புலி அங்கு வந்தது.
அது விவசாயி குர்தேவ் சிங்கை கடித்து கொல்ல அவரை நோக்கி பதுங்கியபடி வந்தது. அதை தனது மோப்ப சக்தி மூலம் அறிந்த நாய் ஜாக்கி சத்தம் கேட்டு குரைத்தது. உடனே சுதாரித்துக்கொண்ட குர்தேவ்சிங் கண் விழித்து எழுந்தார்.
இதற்கிடையே நாய் குரைத்த சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினரும் திரண்டு அங்கு வந்துவிட்டனர். அதை பார்த்து மிரண்ட புலியின் பார்வை நாயின் மீது ஆத்திரமாக மாறியது.
குர்தேவ்சிங்கை விட்டு நாயின் மீது பாய்ந்து தாக்கியது. பதிலுக்கு நாயும் புலி மீது பாய்ந்து சண்டை போட்டது. இரண்டும் கடுமையாக சண்டையிட்டன.
அப்போது புலியும், நாயும் திடீரென காணாமல் போயின. எனவே குர்தேவ் சிங்கின் உறவினர்கள் தேடிச்சென்ற போது சிறிது தூரத்தில் நாய் ஜாக்கி இறந்து கிடந்தது. புலியுடன் ஏற்பட்ட சண்டையில் பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டது.
எஜமானரை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்டு தனது இன்னுயிரை இழந்த ஜாக்கியின் விசுவாசத்தை குர்தேவ்சிங்கும் அவரது உறவினர்களும் பாராட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.