நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வக்கீல் ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘சபாஷ் நாயுடு’ பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் ப.இளங்கோவன் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.
ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.
சர்ச்சைக்குள்ளான நடிகர் சிம்புவின் ‘பீப்’ பாடல் குறித்து கோவை கோர்ட்டில் இளங்கோவனும், வக்கீல் ஜெயபாலும் வழக்கு தொடர்ந்து, அதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நடிகர் சிம்பு மற்றும் இசைஅமைப்பாளர் அனிரூத் ஆகியோர் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல்ஹாசன் பட தலைப்புக்கு அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.