இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகி ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருந்தார். குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
ஷில்பா ஷெட்டிக்கும் லண்டனில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜ்குந்த்ரா ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்து விட்டு ஷில்பா ஷெட்டியை 2009-ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு ஷில்பா ஷெட்டி சினிமாவில் நடிக்கவில்லை. ‘‘எனது பெற்றோர் திருமணம் செய்து 35 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தது போல் நாங்களும் சேர்ந்து வாழ்வோம்’ என்று ஷில்பா ஷில்பா ஷெட்டி அப்போது கூறி இருந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் வீச தொடங்கி உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட முடிவு செய்து இருப்பதாகவும் இந்தி பட உலகில் கிசுகிசுக்கள் பரவின.
இதற்கு ஷில்பா ஷெட்டி பதில் எதுவும் சொல்லாமல் இருந்தார். இதனால் அவர்கள் பிரிந்து விடப்போகிறார்கள் என்ற சந்தேகம் வலுத்தது. தற்போது இதற்கு ஷில்பா ஷெட்டி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
‘‘எனது கணவர் ராஜ்குந்த்ராவை நான் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவி உள்ளன. இது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த வதந்தி எங்கிருந்து யாரால் கிளப்பி விடப்பட்டது என்று தெரியவில்லை. லண்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள எனது உறவினர்கள் டெலிவிஷன்களில் இந்த செய்திகளை பார்த்து மிகவும் வருந்தினர்.
திருமண பந்தத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது கணவரை நான் நேசிக்கிறேன். அவரை பிரிய மாட்டேன். நாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தயவு செய்து இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’’. இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்.