ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்த மிருக வதை தடை சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. எனவே இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், எனவே இந்த போட்டிக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு மே 7-ந் திகதி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடைவிதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ந் திகதி அனுமதி வழங்கியது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா) ஆகியவற்றை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஜனவரி 7-ந்தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்து ஜனவரி 12-ந் திகதி உத்தரவிட்டது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இந்த மனுக்களின் மீதான விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தும் வகையில் தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் கடந்த ஜூன் 15-ந் திகதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘மிருக வதை தடை சட்ட திருத்த மசோதா 2016’ என்ற ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்காக மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த வரைவு மசோதா சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வரைவு மசோதாவில், மிருக வதை தடை சட்டத்தில் விலங்குகளுக்கு வலி மற்றும் கொடுமை இழைப்பதற்கான தண்டனையை அதிகரித்தல், இந்தியாவின் எந்த பகுதியிலும், நிகழ்ச்சிகளில், சடங்குகளில் மத ரீதியாகவோ சமுதாய ரீதியாகவோ அல்லது பாரம்பரிய வழிமுறைகள் சார்ந்தோ மிருகங்களை காட்சிப்படுத்தவும் பயிற்றுவிக்கவும் அனுமதிக்கும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, மராட்டியம், கர்நாடகா, பஞ்சாப், அரியானா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் காளை மாட்டு ரேக்ளா போட்டிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இது போன்ற நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்றே ஏற்பாடு செய்யப்பட வேண்டும். விலங்குகள் வதைத் தடுப்பு சங்கம் மற்றும் மாநில மிருக நல வாரியம் ஆகிய அமைப்புகளின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும். இந்த நிகழ்ச்சிகளின் போது மிருகங்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை என்பதை இந்த அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
இவை போன்ற திருத்தங்களுடன் மத்திய அரசு முன் வைத்துள்ள மிருக வதை தடை (திருத்தம்) வரைவு மசோதாவை அறிமுகப்படுத்த தடை ஏதும் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், மந்திரிசபையின் ஒப்புதலை பெற்ற பிறகு வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.