நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராகவும், தலைவராகவும் திகழ்ந்தவர் பிராண்டன் மெக்கல்லம். அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது கிளப் அளவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார்.
கிறிஸ் கெய்ல் உலகளவில் உள்ள டி20 லீக் தொடரில் விளையாடுவதுபோல் பிராண்டன் மெக்கல்லமும் ஏராளமான கிளப்புகளில் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர் மற்றும் பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக், இங்கிலாந்து டி20 லீக் (மிடில்செக்ஸ் அணி) என 10 கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் குறித்து இங்கிலாந்து முன்னாள் தலைவர் இயான் போத்தம், மெக்கல்லம் இருவரும் ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினர்.
அப்போது, கிளப் அணிகளுக்காக விளையாடி வரும் மெக்கல்லம், டி20 போட்டிகள் சர்வதேச உலகக்கோப்பை அளவில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்கல்லம் மேலும் கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் சுவாரஸ்யமானது. ஏனென்றால், நீங்கள் இங்கே விளையாடும்போது ‘வந்தோம் அதிரடியாக விளையாடி விட்டு சென்றோம்’ என்று இருக்க முடியாது. இதை நான் உறுதி செய்கிறேன். உங்களால் இரண்டு வாரத்திற்குள் தொடருக்கு சரியான வகையில் தயார் ஆக முடியாது. போட்டியில் உங்களை முழுவதுமாக ஈடுபடுத்த அணியோடு நீண்ட காலம் இருப்பது அவசியம்.
டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகக் கிண்ண அளவில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவை எல்லாம் உலகம் முழுவதும் கிளப் போட்டிகளாக நடத்தப்படலாம்’’ என்றார்.