கிளப் டான்ஸ் பாடல்கள் மற்றும் குணச்சித்திர நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி சென்னையில் காலமானார்.
1963-ம் ஆண்டு எம்.ஜி.அர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர், ஜோதிலட்சுமி. பின்னாளில் 1970-ம் ஆண்டுவாக்கில் பல படங்களில் நடனப் பெண்ணாகவும், வில்லியாகவும், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.
குறிப்பாக, அடிமைப் பெண் படத்தில் வரும் ‘காலத்தை வென்றவன் நீ’, ‘பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம்பெற்ற ‘கட்டோடு குழலாட, ஆட’ போன்ற இன்றளவும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பாடல் காட்சிகளில் தோன்றும் ஜோதிலட்சுமி, பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும், சில தெலுங்கு படங்களில் ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ ஆகவும் திறம்பட நடித்திருந்தார்.
1980-ம் ஆண்டுவாக்கில் இவரது தங்கை ஜெயமாலினி தென்னிந்தியப் படங்களில் நடன காட்சிகளில் அறிமுகமான பின்னர் ஜோதிலட்சுமியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது.
எனினும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 300 படங்களில் அவர் நடித்திருந்தார்.
சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜோதிலட்சுமி சென்னையில் நேற்று இரவு காலமானார்.
அவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.