ஸ்ரீகாந்தை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது அப்பா விருப்பப்படுகிறார். ஆனால், இதில் துளியும் விருப்பம் இல்லாத ஸ்ரீகாந்த், அப்பாவின் விருப்பத்தின் பேரில், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வருகிறார். இவருக்கு ஒரு பலவீனம் உள்ளது. அதாவது, இவருக்குள் இருக்கும் நல்ல மனசாட்சி, கெட்ட மனசாட்சி இரண்டையும் அடிக்கடி மனதில் போட்டு குழப்பிக் கொள்வார்.
நல்ல மனசாட்சியாக தன்னையே நினைத்துக் கொள்ளும் ஸ்ரீகாந்த், கெட்ட மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து, அதற்கு பெயரும் வைக்கிறார். அவர்தான் சந்தானம். சந்தானத்துக்கு நம்பியார் என்றும் பெயர் வைக்கிறார். இந்நிலையில், ஒருநாள் விபத்தில் எதேச்சையாக சுனைனாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு நாளுக்கு நாள் காதலாக மாறுகிறது.
இப்படியாக ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அவருடைய மனதுக்குள் இருக்கும் கெட்ட மனசாட்சியான சந்தானம் வெளிவருகிறார். அவர் குடிப்பழக்கமே இல்லாத ஸ்ரீகாந்தை குடிக்க வைக்கிறார். முதன்முதலாக குடிப்பதால், போதை தலைக்கேறிய ஸ்ரீகாந்த், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கெட்ட விஷயங்களை செய்கிறார். அதாவது, ஏரியா போலீசிடம் சண்டை போடுவது, கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடிப்பது, சுனைனாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இப்படிப்பட்ட பல கெட்ட விஷயங்களை செய்கிறார். இதனால் அவர் பல பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்கிறார்.
இறுதியில், இந்த பிரச்சினைகளில் எல்லாம் இருந்து ஸ்ரீகாந்த் எப்படி மீண்டார்? தனது அப்பாவின் கனவை அவர் நிறைவேற்றினாரா? காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட, காமெடி என எல்லாவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீகாந்துக்கு இப்படம் பெரிய ஹிட் கொடுத்துள்ளது. தயாரிப்பாளராகவும் இந்த படத்தின் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
இன்னொரு ஹீரோ என்று சொல்லும்படி இருக்கிறது சந்தானத்தின் கதாபாத்திரம். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர்தான் இந்த படத்தின் தலைப்பும்கூட. அதனால், தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், இவர் படத்தில் வருகிற காட்சிகள் எல்லாமே ரசிகர்களை கலகலக்க வைத்திருக்கிறது. ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும், அதை காமெடியாக, கலகலப்பாக கொண்டுபோயிருப்பது இவருக்கே உரிய தனிச்சிறப்பு. இந்த படத்திற்கு பெரிய பக்கபலமாக இருக்கிறார் சந்தானம்.
நாயகி சுனைனா, அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அழகான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் பிற கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் கணேஷாவுக்கு இதுதான் முதல்படம். முதல்படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருக்கிறார். நம்மை சுற்றி எதிர்மறையான சிந்தனைகள் இல்லாமல், நேர்மையான சிந்தனைகள் இருந்தாலே எல்லாம் நன்மையில் முடியும் என்பதை இந்த படத்தில் ரொம்பவும் அழகாக சொல்லியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். இந்த படத்தில் சந்தானத்தை ஒரு பாடல் பாடவைத்திருக்கிறார். அது ஒரு தைரியமான முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். பின்னணி இசையை ரொம்பவும் அழகாக கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நம்பியார்’ ரசிக்கலாம்.