போட்டோகிராபரான நாயகன் பரத் ரெட்டி, வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதற்காக தேக்கடியில் உள்ள காட்டுக்குள் பயணப்படுகிறார். புகைப்படங்கள் எடுத்து முடிப்பதற்குள் இரவாகிவிடுவதால் காட்டுக்குள்ளேயே இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்.
இரவு அந்த வீட்டில் தங்கி தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு அங்கு ஒரு மெமரி கார்டு கிடைக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று எடுத்து பார்க்கிறார். அந்த மெமரி கார்டில் பெண்கள், ஆண்கள் என நண்பர்கள் கூட்டம் குடித்துவிட்டு, கும்மாளம் போடுவதுபோல் போட்டோக்கள் இருக்கிறது.
அதை பார்த்துவிட்டு, பத்திரிகையில் இருக்கும் தனது நண்பருக்கு போன் போட்டு சில விஷயங்களை கூறுகிறார். அப்போது, அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. ஒரு பெண் பேய் அவரை விடாமல் துன்புறுத்துகிறது. இதனால், அங்கிருந்து அவர் தப்பித்து வெளியே வருகிறார்.
அவர் வரும்போது, ஒரு வருஷத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அப்போது இறந்து போனவர்கள் எல்லோரும் அவருடைய கண் முன்னால் வந்து போகிறது. எதனால் அப்படி தெரிகிறது? அந்த மெமரி கார்டுக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்பந்தம்? அந்த பேய் இவரை ஏன் விடாமல் துன்புறுத்துகிறது? என்பதுதான் இப்படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்திருக்கிற பரத் ரெட்டியை சுற்றித்தான் இந்த கதை முழுக்க நகர்கிறது. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, பேயை பார்த்து பயப்படும் காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி, குழந்தைகளிடம் பாசம் காட்டும்போது நடிப்பில் மிளிர்கிறார். இந்த படத்தில் விசாகா சிங், மீனாட்சி தீட்சித் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இதில் விசாகா சிங் ஒரு பேயாக நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே பயங்கரமான திகிலை ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில் செண்டிமென்ட், பாசம் என எல்லாவற்றிலும் அவரது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் மீனாட்சி தீட்சித், ஒருசில காட்சிகளே வந்தாலும், தனது அழகாலும், நடிப்பாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஜான் விஜய், ராம்தாஸ், சிங்கம் புலி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருககிறார்கள். குறிப்பாக, சிங்கம்புலி, யோகி பாபு வருகிற காட்சிகள் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.
பேய் படம் எடுப்பது இப்போதைக்கு டிரெண்டாகி வரும் சூழ்நிலையில், முழுக்க முழுக்க ஒரு திகில் நிறைந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிசர்மா. ஒரு சில காட்சிகளில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் கடைசிவரை படத்தை போரடிக்காமல் கொண்டு போயிருப்பது சிறப்பு.
ஒய்.ஆர்.பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையில் திகிலை வரவழைத்திருக்கிறார். ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவில் தேக்கடியின் அழகு பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘பயம் ஒரு பயணம்’ திகிலூட்டும் பயணம்.