நாயகன் அர்வினும், நாயகி பவித்ரா கவுடாவும் முதலில் நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாகிறார்கள். அதன்பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறக்கிறது. இவர்களது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஒருநாள் அர்வின் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் தாமதமாக வீட்டுக்கு திரும்புகிறான். அதற்குள், வீட்டுக்குள் திருடன் ஒருவன் புகுந்து விடுகிறான். அவன் வீட்டுக்குள் பணத்தை திருடிக்கொண்டிருக்கும்போது வில்லனான சபீர் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். அவனைப் பார்த்ததும் அந்த வீட்டுக்குள்ளேயே திருடன் பதுங்கிக் கொள்கிறான்.
வீட்டுக்குள்ளே வரும் சபீர், அர்வினின் மனைவியை அடித்து கட்டிப் போடுகிறான். அப்போது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் அர்வினையும் அடித்து கட்டிப்போடுகிறான். அதன்பிறகு, சபீர், அந்த வீட்டின் அறைக்குள் இருந்து ஒரு பெண் குழந்தையை கூட்டிவந்து, தான் தெருவில் அந்த குழந்தையை பார்த்ததாகவும், அவளை தனக்கு பிடிக்காததால் அழைத்து வந்ததாகவும் கூறி, அந்த குழந்தையையும் இவர்களுடன் சேர்த்து கட்டிப் போட்டு வைக்கிறான்.
அப்போது, சபீர், அர்வினிடம் ஒரு நிபந்தனை வைக்கிறான். அதாவது, தான் வெளியில் இருந்து கூட்டி வந்ததாக கூறும் அந்த பெண்ணை அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொலை செய்யவேண்டும் என்று கூறுகிறான். அப்படி அந்த குழந்தையை அர்வின் கொலை செய்யாவிட்டால், அவனது மனைவியை தான் கொன்றுவிடுவதாக அர்வினை மிரட்டுகிறான்.
சபீர், அர்வீனை கொலை செய்யச் சொல்லும் அந்த பெண் குழந்தை யார்? அவளை எதற்காக அர்வினை கொலை செய்யச் சொல்கிறான். அர்வினுக்கும், சபீருக்கும் என்ன சம்பந்தம் என்பதை பிற்பாதியில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகன் அர்வினுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. படம் முழுக்க சபீரிடம் கெஞ்சுவது போலவே இவருடைய காட்சிகள் அமைந்துள்ளது. இருப்பினும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சபீர், பைத்தியக்காரத்தனமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் மிரட்டியிருக்கிறார்.
நாயகி பவித்ரா கவுடாவுக்கும் படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. முதல்பாதியில் நாயகனை காதலிப்பதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில், நாயகியை கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியை வைத்து கட்டிவைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவரது கதாபாத்திரம் மௌனமாகவே போய்விடுகிறது.
திருடனாக வரும் ஜெயக்குமார் ஜானகிராமன், வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களால் பயந்து நடுங்குவதும், தான் மாட்டிக்கொள்வோமா என்று பயந்து நடக்கும் காட்சிகளில் எல்லாம் வித்தியாசமான முகபாவனைகளை காட்டி சிரிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா பிரசாத். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வைத்திருக்கிறார். ஆனாலும், திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் அந்த பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் OCD என்ற நோயை பற்றி இப்படத்தில் குறிப்பிட்டிருக்கும் இயக்குனர், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைக்காமல், அவர்களை குணப்படுத்துவதற்கான எளிய முறைகளையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் படத்தில் பாடல்களே இல்லை. இருப்பினும், பின்னணி இசை திரில்லுடன் நகர்வது சிறப்பு. பானு முருகனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘54321’ ரசிக்கலாம்.