ஆந்திர சட்டசபையில் இன்று தெலுங்கு தேச கட்சி உறுப்பினர் வேணுகோபால ரெட்டி மற்றும் சில உறுப்பினர்கள், வெயில் தொடர்பான பலி மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர். பேரிடர் மேலாண்மைத்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் சின்ன ராஜப்பா பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் கடந்த நான்கு மாதங்களில் 723 பேர் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 238 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.
கிழக்கு கோதாவரியில் 134 பேரும், விசாகப்பட்டினத்தில் 115 பேரும் பலியாகியுள்ளனர். கடந்த வருடத்தில் 1369 பேரும், 2014 -ம் ஆண்டில் 448 பேரும் 2013-ம் ஆண்டில் 861 பேரும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.
வெயிலை சமாளிப்பது தொடர்பான செயல் திட்டம் கடந்த ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெயில் தொடர்பாக அரசாங்கம் ஒரு விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. வெயிலுக்கு ஏற்றாற்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திரா தவிர தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களிலும் வெயிலுக்கு அதிகமான பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.