பிரபல நகைச்சுவை நடிகர் கபில்சர்மா மும்பை வெர்சோவாவில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியதாகவும், இதில் அவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரி ஒருவர் அவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், லஞ்சம் கேட்ட அதிகாரியின் பெயரை கபில் சர்மா இன்னும் தெரியப்படுத்தவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் அவர் மவுனம் சாதிப்பதாகவும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மராட்டிய நவநிர்மாண் சேனா தரப்பில் வெர்சோவா போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநகராட்சி குழு தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே வலியுறுத்தினார்.
இதனிடையே, கபில் சர்மா சதுப்புநிலக்காடுகளை அழித்து அங்கு கட்டிடம் கட்டியதாகவும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நவநிர்மாண் சேனா பொது செயலாளர் ஷாலினி தாக்கரே நேற்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்தேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் முறையிட்டார்.