தர்மபுரியில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை கூறினார். அமைச்சர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வந்த நகைச்சுவை துணுக்குகள் குறித்தும் பேசினார்.
விஜயகாந்தின் இந்த பேச்சு முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தியதாக கூறி, அவர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்காக விஜயகாந்த் கடந்த நவம்பர் 24-ந் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுபாதேவி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது. கடந்த ஜூலை 15-ந் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆகஸ்டு 24-ந் திகதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, விளக்கம் கோரி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனுதாரர் மூலம் நேரடியாக நோட்டீசு அனுப்புமாறும், அதற்கு இரு வாரங்களுக்குள் அவர் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ந் திகதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் மத்திய அரசும் இரு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் மீண்டும் நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நோட்டீசு தரப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விஜயகாந்த் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜரானார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பதில் மனு தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கு மேலும் இரு வாரங்கள் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.