மகாபாரத டெலிவிஷன் தொடரில் முக்கிய கதாபாத்திரமான திரவுபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் பிரபல நடிகை ரூபா கங்குலி.
இவர் பாரதீய ஜனதா கட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு இணைந்தார். கடந்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ரூபாகங்குலி பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரரான நவஜோத் சிங் சித்து அக்கட்சியில் இருந்து விலகினார். அவரது எம்.பி. பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபை எம்.பியாக நடிகை ரூபா கங்குலி நேற்று நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற மேல்-சபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டது குறித்து நடிகை ரூபா கங்குலி கூறுகையில், “என்னை எம்.பி.யாக தேர்வு செய்த பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன். எனக்கு அளிக்கப்பட்ட இந்த பொறுப்பில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பேன்” என்றார்.