இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 9-ம் திகதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ராஜ்காட்டில் நவம்பர் 9-ம் திகதி முதல் 13-ம் திகதி வரையில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இணைந்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த 23 வயதான ஹர்திக் பாண்ட்யா இதுவரை 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், 16 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருப்பதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்துள்ள தேர்வு குழு மற்றும் ரசிகர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.