பிரதமர் மோடி கடந்த 8-ந் திகதி 500 மட்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந் திகதி மத்திய அரசின் குருப்-சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூபாய் 10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் கடந்த சில நாட்களாக பணத்தட்டுப்பாட்டால் அவதிபட்டு வந்தோம். வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததால் அதை எடுக்க முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகளை வைத்தோம்.
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய ஊதியத்திலிருந்து முன்பணமாக 10 ஆயிரத்தை இன்று முதல் 23-ந் திகதி வரை எங்களின் அலுவலகங்களில் வாங்கிக்கொள்ளலாம் என்று எனது உயர் அதிகாரி கூறினார். இந்த தொகையை வாங்கிய பிறகு எங்கள் குடும்பத்தின் பணத்தட்டுப்பாடு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.