எதிர்காலத்தில் பூமி மீது விண்கல் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க புவிப்பௌதிகவியல் ஒன்றியத்தின் கூட்டம் ஒன்றில், இதற்காக புதிய விண்கலம் ஒன்றை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த விண்கலம் பூமியை நோக்கிவரும் வால் நட்சத்திரம் அல்லது விண்கல் போன்றவற்றை அணு வெடிபொருள்கள் மூலம் தகர்த்து அதன் பாதையை மாற்றுவதற்காக பயன்படலாம்.
சுமார் 15 ஆயிரம் விண்கற்கள் தற்போது கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இன்னும் நிறைய விண்கற்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன என்றும், அந்த விண்கற்கள் பூமியுடன் மோதும் பாதையை கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரே ஒரு பிரம்மாண்ட விண்கல் கடலில் விழுந்தாலும், காற்றில் பல கிலோ மீட்டர்களுக்கு பெரிய அலைகளை உண்டாக்கி கடற்கரையோர நகரங்களை அழித்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.