டுபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார்.
இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, இந்தோனேசியா நாட்டில் இருந்து வீட்டுவேலை செய்வதற்காக துபாய்க்கு வந்த எங்களை வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் பணஆசை காட்டி, வேலை செய்யும் வீட்டிலிருந்து வெளியேறி வந்துவிடும்படி வலியுறுத்தியுள்ளனர்.
அப்படி வந்த பெண்களை இன்னொரு பெண்ணிடம் 4 ஆயிரம் திர்ஹம் பணத்துக்கு அவர்கள் விற்றனர். அவர்களை விலைக்கு வாங்கிய மற்றொரு பெண், அந்தப் பெண்களை பலவந்தப்படுத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு அவர்களை விருந்தாக்கியதன் மூலம் இந்த தரகு கும்பல் பெரிய தொகையை வருமானமாக சம்பாதித்துள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விபசார தரகர்கள் மூன்றுபேரையும் கைதுசெய்த துபாய் போலீசார், அவர்கள் மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையானதும், உடனடியாக அவர்களை துபாயில் இருந்து வெளியேற்றுமாறும் குடியுரிமைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.