இந்தியா முழுவதும் அறியப்பட்ட முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது திடீர் மரணம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது ஆளும் கட்சியாக அ.திமு.க. இருந்து வருகிறது. எனவே, ஆட் சியை காப்பாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
சசிகலாவை அந்த கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளனர். அடுத்து சசிகலா முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சில அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப்போல மக்கள் செல்வாக்கு பெற்ற புதிய தலைவர்கள் அரசியலில் இல்லை. எனவே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடும் வகையில் சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் பரபரப்பான போஸ்டர் கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை கோட்டையில் ரஜினி கை அசைப்பது போன்ற படத்தை இணைத்துள்ளனர். அதில், “தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்… தொண்டர்கள் இருக்கிறோம்” என்ற வாசகம் இடம் பெற் றுள்ளது.
இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். நேர்மையான ஆட்சியாக அது நடக்க வேண்டும். அதை வழிநடத்த செல்வாக்குமிக்க நல்ல தலைவர் தேவை. அந்த தகுதி ரஜினிக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த தருணத்தில் அவர் அரசியலுக்கு வரவேண்டும். என்பதை வற்புறுத்தவே இந்த அழைப்பை விடுத்துள்ளோம்”. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
போஸ்டரில் இடம்பெற்றுள்ள திருச்சி மாவட்ட ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜு கூறியதாவது:-
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும். அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம். தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். உடனடியாக ரஜினி தனது முடிவை அறிவிக்க வேண் டும்.
விரைவில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளும் ரஜினியை சென்னையில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்‘ என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறார்கள். என்றாலும் அதை ரஜினி ஏற்கவில்லை. இப்போது மீண்டும் அவரை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்து அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.
ரஜினி இந்த அழைப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை. என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ரஜினி ரசிகர்களின் திடீர் போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.