அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநில தேவாலயமொன்றில், கறுப்பின மக்கள் 9 பேரை இன ரீதியாக கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெள்ளை இனத்தை சேர்ந்த மேலாதிக்கவாதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில், தேவாலயத்தில் இருந்த ஒரு பைபிள் ஆய்வு குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டைலன் ரூஃ ப் என்ற இந்த நபர் மீது வெறுப்பு உணர்வினால் புரிந்த குற்றங்கள் உள்பட 33 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கடந்த மாதத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தனது குற்றத்துக்கு வருத்தம் எதனையும் தெரிவிக்காத டைலன் ரூஃ ப், இது குறித்து , ”இதை செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன். மேலும், தற்போதும் இதை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்” என்று தீர்ப்பு கூறும் நடுவர்களிடம் (ஜூரி) தெரிவித்தார்.
தங்களின் இறுதி தீர்ப்பை எட்டும் முன், ஏறக்குறைய மூன்று மணி நேரம் இது குறித்து தீர்ப்பு கூறும் நடுவர்கள் குழுவினர் (ஜூரி) விவாதித்தனர்.