கடந்த 2010-ம் ஆண்டு விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விக்கி லீக்சுக்கு ரகசிய ஆவணங்களை திருடி வழங்கியதாக திருநங்கை செல்சியா மேன்னிங் (29) கைது செய்யப்பட்டார்.
ஆணாக பிறந்த அவரது பெயர் பிரட்லீ டேன்னிங். உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறியவர். இந்த வழக்கில் அவருக்கு கோர்ட்டு 35 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
அதை தொடர்ந்து அவர் கன்சாசில் எள்ள போர்ட் லீவென் வொர்த்தில் உள்ள ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் 2 தடவை தற்கொலைக்கு முயன்றார்.
அவர் அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை தைரியமாக வெளியுலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வந்தது. ஈக்வேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே-வும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.
விரைவில் பதவி விலக உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா கருணை அடிப்படையில் செல்சியா மேன்னிங்கை விடுதலை செய்ய வேண்டும் என சமீபத்தில் அசாஞ்சே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.