அமெரிக்கா கொண்டுவந்துள்ள வரைவு நிறைவேற்று அதிகார ஆணையின் விவரங்களை பிபிசி அறிந்துள்ளது. இந்த வரைவு ஆணை நிறைவேறும் பட்சத்தில் அது பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் அமெரிக்காவிற்கும் நுழையாதபடி செய்வதாக உள்ளது.
அமெரிக்காவில் விசாக்கள் மறுக்கப்படுவது தொடர்பான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஏற்கனவே உள்ளதா என்று பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏழு ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் குடியேறிகள் அல்லது அகதிகள் மீது குடிவரவுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று பிபிசியிடம் உள்ள அந்த வரைவு ஆணை மூலம் தெரிய வருகிறது.
அமெரிக்க அதிபர், பெயர் குறிப்பிடப்படாத அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு விசாக்கள் அளிப்பதை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளார் என்று அந்த எட்டு பக்க ஆவணம் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதாக அவர் கருதுவதாக தெரிகிறது.
அந்த பட்டியலில், சிரியா, இராக், இரான், லிபியா, சூடான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் நாடுகள் இருப்பதாக தாங்கள் நம்புவதாக குடிவரவு வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நாடுகளில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள்- அதில் அகதிகளும் அடங்குவார்கள்- அமெரிக்காவிற்குள் நுழைய பெரிய அளவில் சிரமத்தை சந்திப்பார்கள். ஆனால் ஏற்கனவே சில நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க விசாவை பெற சிக்கலை சந்திக்கின்றனர்.
உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா வர விசா தேவை இல்லை என்ற நிலை இருந்தாலோ அல்லது நீங்கள் அமெரிக்காவின் விசா தள்ளுபடித் திட்டத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தால் தவிர, நீங்கள் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாகவே, வேலைக்காகவோ அல்லது சுற்றுலா போன்ற காரணங்களுக்காக பொதுவாக-பல்நோக்கு பி விசா (multi-purpose B visa) வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இது மறுக்கப்படலாம்.
குறிப்பிடப்பட்ட அந்த ஏழு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க விசா விண்ணப்பங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் விசா மறுக்கப்படும் விகிதம் கொண்ட நாடுகள் அவை. ஆனால் இந்த நாடுகள் விசா மறுக்கப்படும் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இல்லை. ஆனால் சோமாலியாவும், சிரியாவும் முதல் 20 நாடுகளின் பட்டியலில் உள்ளன.
2015-இல் 35,000க்கும் மேற்பட்ட இரான் நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்துள்ளனர். 2015ம் ஆண்டு தான் மிக சமீபத்திய விசா தொடர்பான தரவுகள் கிடைத்த ஆண்டு ஆகும்.
எந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் அடிக்கடி அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது? பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகள் இதில் இலக்கு வைக்கப்படுகிறதா? 2016-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.
சமீபத்தில், மோதல்களை சந்திக்கும் அல்லது சந்தித்து வரும் நாடுகள் அதிக அளவில் விசா மறுப்புக்கு ஆளாகியுள்ளன.
இதில் சோமாலியா, இராக் மற்றும் சிரியா ஆகியவை அடங்கும்.ஆனால் இந்த நாடுகளை காட்டிலும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சுமார் 74 சதவீதம் விசா விண்ணப்பங்கள் 2016- இல் மறுக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை காட்டிலும் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் இந்த நாட்டில் இருந்து வரும் விசாக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
வரைவு ஆவணத்தில் உள்ள அனைத்து ஏழு நாடுகள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகள் என்பது உண்மை தான். ஆனால், அதே போன்ற மற்ற நாட்டு விண்ணப்பதாரர்கள் விசா பெறுவதில் குறைவான பிரச்சனைகளே உள்ளன.
சௌதி அரேபியா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லெபனான் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு ஒப்பீட்டளவில் அரிதாகவே விசாக்கள் மறுக்கப்படுகிறது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள்தான் 9/11 தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள்.
வெறும் நான்கு சதவீத சௌதி நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே 2016-இல் விசா மறுக்கப்பட்டது. 2015-இல் 1,50,000-க்கும் மேற்பட்ட சௌதி நாட்டினருக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல அல்லது தொழில் காரணமாக விசா அளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பட்டியலில் உள்ள நாடுகளில், சௌதி அரேபியா நாட்டின் அண்டை நாடான, ஒமான் நாட்டினரின் விண்ணப்பங்கள், மிகக் குறைந்த அளவிலேயே நிராகரிக்கப்படுகின்றன. சுமார் 2 சதவீதத்துக்கும் குறைவான ஓமான் நாட்டு விண்ணப்பங்களே நிராகரிப்பட்டுள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த எண்ணிக்கையை விட, 2016-இல் விசா நிராகரிப்பட்ட இஸ்ரேலியர்களின் சதவீதம் இரு மடங்குக்கு அதிகமாக உள்ளது.
ஏன் வெறும் 15 சதவீதம் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழும் நாடு) நிராகரிப்பட்டுள்ளனர்? அதோடு ஒப்பிட்டால், அதன் அண்டை நாடான ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 57சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டன? ஜார்ஜியா பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு.
அமெரிக்க அரசின் தூதரக விவகார துறை பணியகத்தின் செய்தி தொடர்பாளர் வில் காக்ஸ்சிடம் பிபிசி செய்தியாளர் பேசினார்.
விசா நிராகரிப்பு விகிதங்கள் தனிப்பட்ட நாடுகளை கொண்டு அமைக்கப்படுவதில்லை. அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கும் தனி நபரை பொருத்துதான் முடிவு செய்யப்படும் என காக்ஸ் தெரிவித்தார்.
சில நாடுகளில் விசா அதிகாரிகள் மற்ற நாடுகளில் இருக்கும் விசா அதிகாரிகளை விடக் கடுமையாக நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, காக்ஸ் இதற்கான வாய்ப்பு இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றார்.
அனைத்து விசா அளிக்கும் அதிகாரிகளுக்கும் ஒரே தரமான பயிற்சிதான் அளிக்கப்படுகிறது, அனைவருக்கும் ஒரே விதமான வசதிகள்தான் அளிக்கப்படுகிறது, மேலும் சட்டரீதியாக சரிபார்க்கக்கூடிய அளவுகோல்கள் இருக்கின்றன,” என்றார்.
தனிப்பட்ட முறையிலான புள்ளிவிவரங்கள் குறித்து தான் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த அவர், விசா அளிப்பதா, வேண்டாமா என்ற முடிவை எடுக்க அதிகாரிகள் பயன்படுத்தும் தகுதிகாண் அம்சங்களை வைத்து, முடிவின் அடிப்படையை அறியலாம் என்று கூறினார்.
புலம்பெயர்பவர்கள் அல்லாத விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும், புலம் பெயர்வதற்காகத்தான் விண்ணப்பிக்கிறார்கள் என்று அமெரிக்காவின் விசா சட்டம் அனுமானிக்கிறது.
இந்த அனுமானத்தை போக்கும் வகையில், ஒரு விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே அனுமதி கோருவதாகவும், அதே கருத்தை நிரூபிக்க ஆதாரத்துடன், தங்களது நாட்டிற்கு திரும்பும் எண்ணத்துடன் இருப்பதாகவும் நிரூபிக்க வேண்டும்.
அமெரிக்காவின் விசா சட்டம் சொல்லும் அனுமானத்தை விண்ணப்பதாரர் முறியடிக்கும் விதத்தை பொறுத்துத்தான் அவருக்கான ஒப்புதல் தரும் விதமும் அமைந்திருக்கும்.
அதனால், விண்ணப்பதாரரின் தாய்நாட்டில் உள்ள பொருளாதார நிலையை பொறுத்தும் விசா மறுக்கப்படுவதற்கான காரணம் அமையும். நீங்கள் வளமான நாட்டில் இருந்து வருபவரானால், நீங்கள் சுற்றுலா விசாவை கொண்டு புலம்பெயர்வதற்கான வாய்ப்பு குறைவு என்று எடுத்துக்கொள்ளப்படும்.
இது அஜர்பைஜான் நாட்டு விண்ணப்பதாரர்கள் ஏன் ஜார்ஜியா நாட்டினரை விட குறைவான அளவிலேயே நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும். அஜர்பைஜான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் ஜார்ஜியா நாட்டை விட 70 சதவீதம் அதிகம்.
ஆனால், 2016-ல் எல் சல்வடோரை சேர்ந்த 57 சதவீத விண்ணப்பதாரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது; ஆனால், வெறும் ஏழு சதவீத பராகுவே நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே விசா மறுக்கப்பட்டுள்ளது ஏன்? இந்த இரண்டு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது தானே?
பொருளாதார சூழ்நிலையோடு, கூடுதலாக விண்ணப்பதாரர் குடியேறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா இல்லையா என்பதையும் விசா அதிகாரி கருத்தில் கொள்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ஆவணமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடியேறி சமூகங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது இந்த முடிவை எடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அலுவலகம் மதிப்பீடுகளின்படி, 2009-ல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் மொத்த எண்ணிக்கையில், ஐந்து சதவீதத்தினர் எல் சல்வடோரில் இருந்து வந்துள்ளனர். ஆனால், அது போன்ற பராகுவே நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவு.
ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது அவரின் விசாவை நிர்ணயிக்கும் ஒரு காரணியாக இருக்குமா என்று கேட்டபோது, தூதரக அதிகாரிகள் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது, என காக்ஸ் பதில் அளித்தார்.
2016 புள்ளிவிவரங்களில் மற்றெந்த விவரங்களைக் காட்டிலும் மற்றொரு புள்ளிவிவரம் தனித்து தெரிகிறது. வாடிகன் நகரத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில் 62.5 சதவீத பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சுற்றுலா அல்லது தொழில் தொடர்பான விசாவை வைத்து அமெரிக்காவில் குடியேற முயல மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, விசா தள்ளுபடித் திட்ட நாடுகளில் இருந்து வரும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு விசா தள்ளுபடி திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள், அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேவை உள்ளது என்று காக்ஸ் விவரித்தார்.
இந்த விண்ணப்பம் பின்னர் மறுக்கப்படும். இதனால்தான், விசா தள்ளுபடி திட்டத்தில் உள்ள ஒரு நாடாக வாட்டிகன் இருந்தாலும் விசா மறுக்கப்பட்ட விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால் ஒரு மிகச் சிறிய அளவில் விசா விண்ணப்பதாரர்கள் வெற்றி பெறவில்லை என்பதால் இந்த விகிதம் பெரிய எண்ணிக்கையாக தெரிகிறது.
இந்த எண்ணிக்கை குறித்த அடுத்த கேள்வியான, வத்திக்கான் நகரத்தில் இருந்து வந்த 62.5 சதவீத விண்ணப்பதாரர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தனரா என்று கேட்டபோது, இந்த தனிப்பட்ட விஷயத்தில் கருத்து தெரிவிக்க முடியவில்லை என்று கூறிய காக்ஸ், சிறிய மாதிரிகளை ( சாம்பிள்) வைத்து முடிவுக்கு வருவதில் உள்ள அபாயங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். வத்திக்கான் நகரத்தை சேர்ந்த 7.7 சதவீத விண்ணப்பதாரர்களுக்கு (13 நபர்களில் ஒருவர்)மட்டும்தான் 2014ல் தொழில் மற்றும் சுற்றுலா விசா கோரியபோது நிராகரிப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தெற்கு ஆசியா நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பதாரர்களுக்கு, விசா மறுப்பு என்பது பரந்தளவில் வெவ்வேறு விகிதங்களில் வேறுபடுகிறது
அமெரிக்கா நிராகரித்த விசாக்களில், 2016ல் இந்தியாவை சேர்ந்த 26 சதவீத பி-விசா (B) விண்ணப்பதாரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது, ஆனால், 46 சதவீதிற்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், சுமார் 63 சதவீத விண்ணப்பதாரர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள்.
ஆனால் ஆசிய நாடுகளில் விசா எடுப்பதில் அதிக சிரமத்தை சந்திக்கும் நாடு பூட்டான் ஆகும். சுமார் 70 சதவீத விசாக்கள் நிராகரிப்படுகின்றன.
பூட்டானுக்கு பயணம் செல்வது என்பதே அதிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது ஒருவேளை பரஸ்பர பதிலடி நடவடிக்கையாக இருக்கலாம்.