நடிகர் – யுவன் பிரோஸ் கான்
நடிகை – சாரா செட்டி
இயக்குனர் – ஜிப்ஸி என் ராஜ்குமார்
இசை – முரளி உ கே
ஓளிப்பதிவு – சக்திவேல்
அய்யனார் வீதியில் வசிக்கும் பொன்வண்ணனும், பாக்யராஜும் பால்ய கால நண்பர்கள். பொன்வண்ணன் அந்த ஊரில் சாமியாடியாக இருக்கிறார்.
பாக்யராஜ் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். பாக்யராஜின் பெண்ணான சாரா ஷெட்டி கல்லூரியில் படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் நாயகன் யுவனும் படித்து வருகிறார்.
யுவனின் தாத்தா செய்த தவறுக்காக அவருடைய குடும்பத்தையே பொன்வண்ணனின் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்.
இதனால், காலங்காலமாக அவர்கள் ஊரை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள்.
இதனால், பொன்வண்ணன், பாக்யராஜ் மற்றும் ஊர்க்காரர்கள் மீது வெறுப்பில் இருக்கும் யுவனுடைய குடும்பத்தார் ஊர்க்காரர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறுமுனையில், யுவன், சாராஷெட்டியை ஒருதலையாக காதலித்து வருகிறார். சாராவோ யுவனை கண்டுகொள்வதாக இல்லை.
அதேநேரத்தில், பொன்வண்ணனின் மகளான சிஞ்சு மோகன் யுவனின் மீது ஆசையாக இருக்கிறாள்.
இந்த நிலையில், அய்யனார் வீதியில் ஊர் திருவிழா நடக்கவிருக்கிறது.
அந்த திருவிழாவில் கள்ளச்சாராயத்தை கொடுத்து ஊர் மக்கள் அனைவரையும் கொல்ல யுவனின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் திட்டம் போடுகிறார்கள்.
இந்த திட்டம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததா? யுவன் குடும்பத்தாரிடமிருந்து ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
யுவனுக்கு இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், இப்படத்தில் அவருக்கென்று பெரிதாக வேலையில்லை.
இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.
சாரா ஷெட்டிக்கு காதலை வெறுத்து ஒதுக்கும் கதாபாத்திரம். அதேநேரத்தில், சிஞ்சு மோகனுக்கு விழுந்து விழுந்து காதலிக்கும் கதாபாத்திரம்.
இதை இரண்டையும் இவர்கள் அழகாக செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
படத்தில் அதிக வசனங்கள் பேசியிருப்பது நடிகர் பாக்யராஜ்தான். பூசாரியாக இருந்தாலும் ஊர் மக்கள் இவரை ஒரு பெரிய மனிதராகத்தான் பார்க்கிறார்கள்.
அதற்கேற்றாற் போல், தனது நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பொன்வண்ணன், சாமியாடியாக வந்து நம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.
வில்லனாக நடித்துள்ள செந்தில்வேல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பாக்யராஜ், பொன்வண்ணனுக்கு இணையாக நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
சிங்கம் புலி, சிங்கமுத்து காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை.
தமிழ் சினிமாவில் அதர பழசான இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் பகை, அதையொட்டி நடக்கும் பிரச்சினையையே இப்படத்தில் இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார் சொல்ல வந்திருக்கிறார்.
ஆனால் கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள் என வித்தியாசமான கோணத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், திரைக்கதையின் சொதப்பலால் அதை சரியான கோணத்தில் சொல்ல மறந்துவிட்டார்.
இரண்டு குடும்பங்களுக்குள் இருக்கும் பிரச்சினையுடன் காதலை சொல்ல வந்த இயக்குனர் அதை அழுத்தமாக சொல்லாததும் வருத்தம்.
சக்திவேலின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது. யுகே முரளியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘அய்யனார் வீதி’ இடைஞ்சல்.