கன்னட திரைப்பட வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திர சிங்பாபு தலைமையிலான குழுவினர் கர்நாடகத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்ச நுழைவுக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்க வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு திரையரங்குகளில் அதிகபட்ச நுழைவு கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்படும் என்று மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் ‘பாகுபலி-2’ திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு கர்நாடக மாநில தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்ச நுழைவுக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
மேலும் அனைத்து தியேட்டர்களிலும் பகல் 2.30 மணிக்கு (மேட்னி ஷோ)கன்னட திரைப்படங்கள் கட்டாயமாக திரையிட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ரூ.200 யை விட கூடுதல் கட்டணம் இந்த உத்தரவின்படி வசூலிக்கப்பட மாட்டாது.